எல்லாரும் ஓசில தான போறீங்க.. மீண்டும் மீண்டுமா..? - திமுக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு
பெண்கள் எல்லாரும் ஓசி பஸ்ல தானே போயிட்டு இருக்கீங்க, உங்க கிராமத்திற்கும் ரோடு போட்டதும் ஓசி பஸ்ல போங்க ஆண்டிபட்டி எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை.
“நான் எம்எல்ஏ ஆன பிறகு தான் இப்பகுதிக்கு மழை பெய்கிறது. ஆற்றில் தண்ணீர் வருது” என மலைக்கிராம மக்களிடம் இஷ்டத்திற்கு அள்ளிவிட்ட திமுக எம்எல்ஏ ஓசி பஸ் என்று தொடர்ந்து பேசியதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு பகுதிகளில் பொது மக்களிடம் பேசுகையில் அரசியல் கட்சி தலைவர்களும் சரி, அரசு பிரதி நிதிகளும் சரி பேசும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் என்பது கட்டாயம். அந்த வகையில் குறிப்பாக அரசியல் தலைவர்கள் மேடையில் பேசும்போது உளறல்களால் பல்வேறு சர்ச்சையில் சிக்கிக்கொள்கின்றனர். அப்படி திமுக, அதிமுகவை சேர்ந்தவர்கள் உட்பட இந்த சர்ச்சையில் சிக்கிக்கொள்கின்றனர்.
அப்படிதான் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மண்ணூத்து மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்தார். மண்டபத்தை திறந்து வைத்து கூடியிருந்த கிராமமக்கள் மத்தியில் எம்எல்ஏ மகாராஜன் பேசினார். அவர் பேசும்போது, நான் 2019 இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஓட்டு கேட்டு வரும்போது இந்த பகுதிகள் அனைத்தும் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளித்தது.
இந்த மகாராஜன் பதவி ஏற்றவுடன் மழை பெய்து உங்கள் பகுதி செழிப்படைந்தது. எப்போதும் வறட்சி ஏற்படும் ஆடி மாதத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது என்று பேசினார். மேலும் மகளிர் விடியல் பயணதிட்டத்தில், நான் முன்னரே கூறியது போல் பெண்கள் அனைவரும் அரசு பஸ்ஸில் ஏறி தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு ஓசியில் செல்லுங்கள். வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும். உங்கள் ஊருக்கு விரைவில் புதிய தார்சாலை அமைத்து அந்த வழித்தடத்தில் அரசு பஸ் விடப் போகிறோம்.
அதில் பெண்கள் ஓசியில் பயணம் செய்யப் போகிறீர்கள். உங்கள் ஊருக்கு பஸ் விட்ட பின், எங்கள் ஊருக்கு ஏரோபிளேன் வேணும் என்றும் ரயில் வேணும் என்றும் கேட்டு விடாதீர்கள் என்றார். ஏற்கனவே அமைச்சராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை ஓசி பஸ் என்று இழிவாகப் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏவும் பெண்களை ஓசி பஸ்ஸில் செல்லுங்கள், உங்கள் ஊருக்கு ஓசி பஸ் விட போகிறோம் என்று பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.





















