Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
முகத்தை காட்டுங்கள் என சொல்லி பெண் மருத்துவரின் ஹிஜாப்பை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. நிதிஷ் குமாரை சுற்றி விமர்சனங்கள் வலம் வருவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்தநிலையில் பாட்னாவில் உள்ள முதல்வரின் செயலகமான சம்வாத்தில் ( samvad ) ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் நிதிஷ் குமார் நியமன கடிதங்களை வழங்கி கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு வந்த மருத்துவர் ஒருவர் ஹிஜாப் அணிந்திருந்தார். அப்போது நிதிஷ் குமார் அவரை முகத்தில் இருந்த ஹிஜாப்பை அகற்ற சொல்லி சைகை காட்டினார். உடனே நிதிஷ் குமாரே முகத்தில் இருந்த ஹிஜாப்பை கழற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்த துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரியும் நிதிஷ் குமாரை தடுக்க முயன்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிதிஷ் குமாரின் மனநிலை மோசமான நிலைக்கு சென்றுவிட்டதா அல்லது அவர் 100% சங்கியாக மாறிவிட்டாரா என பாஜகவையும் நிதிஷ் குமாரையும் சேர்த்து விமர்சித்துள்ளது தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம்.
இது வெட்கக்கேடான செயல் என காங்கிரஸ் கட்சி நிதிஷ் குமாரை விமர்சித்துள்ளது. இப்படி செய்தால் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள், அவர் உடனடியாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளது காங்கிரஸ்.





















