![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
'இமானுவேல் சேகரன் நினைவு நாள்' - 2 மாதங்களுக்கு ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு அமல்
’’ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் கோஷங்களை எழுப்பக்கூடாது, பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது, ஒலி பெருக்கிகள் பயன்படுத்த கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு’’
!['இமானுவேல் சேகரன் நினைவு நாள்' - 2 மாதங்களுக்கு ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு அமல் 144 ban for 2 months in Ramanathapuram on the occasion of Immanuel Sekaran Memorial Day 'இமானுவேல் சேகரன் நினைவு நாள்' - 2 மாதங்களுக்கு ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு அமல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/09/75e3c3e6df4c91f29bc4807c7f644e0d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியர் வேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 9-10-1924ம் ஆண்டு பிறந்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடிய இம்மானுவேல் சேகரன், 1956-ம் ஆண்டு முதுகுளத்தூரில் நடந்த சாதிக் கலவரத்தை தொடர்ந்து நடந்த சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியன்று வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பரமக்குடியில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்த இரண்டாம் ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 64 ஆவது நினைவு நாள் நாளை மறுநாளான செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று ஐந்து நபர்களுடன் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது, நான்கு சக்கர வாகனங்கள், திறந்தவெளி வாகனங்கள், டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களில் அஞ்சலி செலுத்துவதற்கு வரக்கூடாது. ஒதுக்கப்பட்ட நேரங்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அனுமதி பெற்று வந்து செல்ல வேண்டும். நினைவு தினத்தை ஒட்டி ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் கோஷங்களை எழுப்பக்கூடாது, பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது, ஒலி பெருக்கிகள் பயன்படுத்த கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
அதேபோன்று, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டும் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு பாதுகாப்பு பணிகளுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தை முதுகுளத்தூர், கமுதி, கீழக்கரை, திருவாடானை, ராமநாதபுரம், மற்றும் ராமேஸ்வரம் உள்பட ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 17 காவல் கண்காணிப்பாளர்கள் 21 கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கள், 60 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள், 300 சார்பு ஆய்வாளர்கள், 4000 தாலுகா காவலர்கள் மற்றும் 600 சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் போக்குவரத்தை சரி படுத்துவதற்காக 250 போக்குவரத்துக் காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பாக, முப்பது வழித்தடங்களில் நான்கு சக்கர வாகனங்களிலும் 57 வழித்தடங்களில் இரண்டு சக்கர வாகனங்களிலும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர், தாசில்தார், டெபுடி தாசில்தார் என அறுபத்தி நான்கு நீதித்துறை நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய 150 வழித்தடங்கள் தடை செய்யப்பட்ட வழித்தடங்களாகவும், அவ்வழித்தடங்கள் வழியே அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளன என்றும், 123 பகுதியில் பதட்டமான பகுதிகள் என்றும் மாவட்டம் முழுவதும் 39 காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன என, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)