![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சமூகநீதி பேசும் தமிழ்நாடு... மலக்குழி மரணத்தில் இரண்டாவது இடம்... ஐந்தாண்டுகளில் 48 பேர் இறப்பு!
மேலும், 2022ல் இதுவரை, 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5 பேர் இறந்துள்ளனர். இந்த வருடத்தில் தமிழகமே இதில் முதலிடத்தில் உள்ளது.
![சமூகநீதி பேசும் தமிழ்நாடு... மலக்குழி மரணத்தில் இரண்டாவது இடம்... ஐந்தாண்டுகளில் 48 பேர் இறப்பு! Tamil Nadu is in the second place in drainage death 48 people died in five years சமூகநீதி பேசும் தமிழ்நாடு... மலக்குழி மரணத்தில் இரண்டாவது இடம்... ஐந்தாண்டுகளில் 48 பேர் இறப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/20/143bbf221cdc8e6e82f18f6ddb871d711658317204_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றத் தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013 இன் படி, சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளுக்குள் துப்புரவு பணியாளர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறை என்பது நம் நாட்டில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். மனித மலத்தை கையால் சுத்தம் செய்வதற்கு எந்த நபரையும் பயன்படுத்தக்கூடாது என்று இந்த சட்டம் தடை விதிக்கிறது. ஆனாலும் இந்த அவலம் இதுவரை தீர்ந்த பாடில்லை. இன்று வரை இதுபோன்ற சுத்தம் செய்யும் பணிகளின்போது, கழிவுநீர் தொட்டியில் இறங்கிய துப்புரவு பணியாளர் உயிரிழப்பு என்ற செய்திகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
அமைச்சர் வீரேந்திர குமார்
இந்நிலையில், இதுபோன்று துப்பரவு பணியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டது. கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார் பதிலளித்தார். அவர் பேசுகையில், 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை 347 பேர், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கையில் உயிரிழந்திருக்கின்றனர் என்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்: கல்யாணத்துக்கு பிறகும் ஜீன்ஸ் பேன்டா? மனைவியிடம் சண்டையிட்ட கணவன் மர்ம மரணம்!
ஆண்டுவாரியாக இறப்பு
மேலும் பேசிய அவர் ஆண்டுவாரியாக எத்தனை பேர் இதன் மூலம் உயிரிழந்தனர் என்று அவர் தெரிவித்திருந்தார். அவர் அளித்த தகவல்களின் படி, 2017-ல் 92, 2018-ல் 67, 2019-ல் 116, 2020-ல் 19, 2021-ல் 36 மற்றும் 2022-ல் 17 பேர் இறந்துள்ளதாக பதிவாகியிருப்பதாக வீரேந்திர குமார் தகவல் அளித்தார்.
மாநில வாரியாக…
கடந்த ஐந்தாண்டுகளில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 51 பேரும், தமிழகத்தில் 48 பேரும், டெல்லியில் 44 பேரும் உயிரிழந்துள்ளனர். 2019 இல் உத்தரபிரதேசத்தில் அதிக இறப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, அந்த வருடம் மட்டும் 26 துப்புரவு தொழிலாளர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2022ல் இதுவரை, 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5 பேர் இறந்துள்ளனர். இந்த வருடத்தில் தமிழகமே இதில் முதலிடத்தில் உள்ளது, அதனை தொடர்ந்து உத்தரபிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)