சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: காத்திருப்பு, தரிசனம், சிறப்பு ஏற்பாடுகள்! முழு விவரம் இதோ!
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.
இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை இன்று தரிசனம் செய்தனர்.
அதிகாலை முதலே, தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். அதிகாலை 3 மணிக்கு கோயில் திறக்கப்பட்டபோது, நடைபாதை மற்றும் புனித படிகள் முழுவதும் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கருவறை திறக்கப்பட்ட பிறகு, நிர்மால்ய அபிஷேகம், கணபதி ஹோமம் மற்றும் நெய் அபிஷேகம் போன்ற சடங்குகள் நடத்தப்பட்டன. கோயில் 41 நாட்களும் மதியம் 1 மணிக்கு மூடப்பட்டு, மீண்டும் 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு ஐயப்பனின் தாலாட்டு பாடலான ஹரிவராசனம் பாடலுடன் மூடப்படும். தினமும் 18 மணி நேரம் நடை திறந்திருக்கும். நடை சார்த்தப்பட்டிருக்கும் சமயத்திலும் பக்தர்கள் 18-ம் படிவழியாக அனுமதிக்கப்படுகின்றனர்.
சபரிமலை கோயிலில் டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந் தேதி நடை மீண்டும் திறக்கப்படும். ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். மகரவிளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 19-ந் தேதி வரை நடைபெறும். சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தினமும் கோயிலில் 90 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதில் 70 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவும், 20 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், கேரள மாநில எல்லையான களியக்காவிளையிலும், சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.






















