![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கிரண் ரிஜிஜூவிடம் மத்திய சட்டத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணி...நீதித்துறையுடன் தொடரும் மோதல் போக்கு காரணமா?
கடந்த 2014ஆம் ஆண்டு, மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
![கிரண் ரிஜிஜூவிடம் மத்திய சட்டத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணி...நீதித்துறையுடன் தொடரும் மோதல் போக்கு காரணமா? Reason behind removal of Kiren Rijiju from union law ministry amid war of words between centre and judiciary கிரண் ரிஜிஜூவிடம் மத்திய சட்டத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணி...நீதித்துறையுடன் தொடரும் மோதல் போக்கு காரணமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/18/06f5705d5334a04af74ba21e60332e931684402754001729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க அமைச்சராக வலம் வந்தவர் கிரண் ரிஜிஜூ. பொதுவாக, வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முக்கிய அமைச்சரவை பதவிகள் வழங்கப்படுவதில்லை என தொடர் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், அதை பொய்யாக்கும் விதமாக அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த கிரண் ரிஜிஜூவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் மோதல் போக்கு:
கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவை மாற்றத்தில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சகத்தை வகித்து வந்த கிரண் ரிஜிஜூவுக்கு கேபினட் அந்தஸ்தில் மத்திய சட்டத்துறை வழங்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு, மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
குறிப்பாக, நீதிபதிகள் நியமன விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்யும் நீதிபதிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில்லை என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது.
நீதிபதிகள் நியமன விவகாரம்:
இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே சுமூகமான சூழல் நிலவவில்லை. இந்த சூழலில்தான், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பல்வேறு முக்கிய அமைச்சகங்களை வகித்து வந்தவருமான ரவிசங்கர் பிரசாத்திடம் இருந்த மத்திய சட்டத்துறை கிரண் ரிஜிஜூவுக்கு அளிக்கப்பட்டது.
இதன்பிறகு, நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நிலவும் பிரச்னை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதன் பிறகுதான், நீதித்துறையும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் நேரடியாக விமர்சித்து கொண்டனர். கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கடந்த பிப்ரவரி மாதம், நீதிபதிகள் நியமன விவகாரத்தில், கவலை தெரிவித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, "இது சீரியசான விஷயம். மத்திய சட்டத்துறை அமைச்சர் இப்படி பேசியிருக்கக் கூடாது. எங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளோம்" என கூறியது.
இப்படி, இரு தரப்பும் மாறி மாறி பரஸ்பரம் விமர்சித்து கொண்ட நிலையில், நீதித்துறை, மத்திய அரசுக்கு இடையேயான பிரச்னை தொடர்ந்து கொண்டே வந்தது. இச்சூழலில்தான், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு கூடுதலாக மத்திய சட்டத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கேபினட் அந்தஸ்து வழங்கப்படவில்லை. சமீபத்திய வரலாற்றில், மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படாமல் இருப்பது இதுவே முதல்முறை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)