"பேக் ஐடி பரிதாபங்கள்" டேட்டிங் ஆப்பில் காதலியை தேடிய தொழிலதிபர்.. 6 கோடியை நாமம் போட்ட அனிதா
டேட்டிங் ஆப் மூலம் தெரிய வந்த பெண்ணின் ஆலோசனை கேட்டு, தன்னிடம் இருக்கும் மொத்த பணத்தையும் சில நிறுவனங்களில் முதலீடு செய்த நொய்டா தொழிலதிபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், டேட்டிங் ஆப் மூலம் தெரிய வந்த பெண்ணின் ஆலோசனை கேட்டு தன்னிடம் இருக்கும் மொத்த பணத்தையும் சில நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அதிக லாபம் வரும் ஆசை வார்த்தை கூறி பணத்தை முதலீடு செய்ய வைத்திருக்கிறார் அந்த பெண். ஆனால், முதலீடு செய்த மொத்த பணத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்றுள்ளார் அந்த தொழிலதிபர்.
மொத்தமாக நாமம் போட்ட பேக் ஐடி அனிதா:
உத்தரப் பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த தல்ஜீத் சிங். டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார். சமீபத்தில்தான், இவருக்கு விவாகரத்து ஆகியுள்ளது. காதல் செய்ய எண்ணி டேட்டிங் ஆப்பை பயன்படுத்த தொடங்கியுள்ளார். அப்போதுதான், ஹைதராபாத்தை சேர்ந்த அனிதா என்பவர், டேட்டிங் ஆப் மூலம் தெரிய வந்துள்ளார்.
இருவரும் பேச தொடங்கியுள்ளனர். சாதாரணமாக பேச தொடங்கி இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். நண்பர்களாக மாறியுள்ளனர். தல்ஜீத் சிங்கின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, டிரேடிங் மூலம் பெரும் லாபம் ஈட்டுவது குறித்த தகவல்களை அனிதா பகிர்ந்து கொண்டதாகவும் மூன்று நிறுவனங்களில் மூதலீடு செய்யும்படி ஆலோசனை சொன்னதாகவும் கூறப்படுகிறது.
முதலில் வலைத்தளம் ஒன்றில் ரூ. 3.2 லட்சத்தை முதலீடு செய்து சில மணி நேரங்களுக்குள் ரூ.24,000 சம்பாதித்திருக்கிறார் தல்ஜீத் சிங். தன்னுடைய லாபத்தில் இருந்து 8,000 ரூபாயை அவருடைய வங்கிக் கணக்கிற்கு அனிதா மாற்றியதால் தல்ஜீத் சிங்குக்கு மேலும் நம்பிக்கை வந்துள்ளது.
தொழிலதிபருக்கு ஷாக்:
அனிதா தனது நலம் விரும்பி என்றும், அவர் தனக்கு சரியான ஆலோசனையை வழங்குகிறார் என்றும் தலிஜீத் சிங் உறுதியாக நம்ப தொடங்கினார். பின்னர், தனது வாழ்நாள் சேமிப்பான சுமார் ரூ.4.5 கோடியை அனிதா சொன்ன நிறுவனங்களில் தல்ஜீத் டிரேடிங் செய்தார். அனிதாவின் ஆலோசனையின் பேரில், கூடுதலாக ரூ. 2 கோடியை கடனாகப் பெற்று அதையும் முதலீடு செய்தார்.
மொத்தம் ரூ. 6.5 கோடியை 25 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பின்னர், பணத்தை எடுக்க முயன்றபோது, முதலீடு செய்யப்பட்ட தொகையில் மேலும் 30 சதவீதத்தை வேறு வங்கி கணக்குக்கு மாற்றும்படி டிரேடிங் செயலியில் சொல்லப்பட்டது. ஆனால், மேலும் பணத்தை முதலீடு செய்ய மறுத்துள்ளார் தல்ஜீத்.
பின்னர், அனிதா தெரிவித்ததாகக் கூறப்படும் மூன்று வலைத்தளங்களில் இரண்டு முடங்கியிருந்தன. இதையடுத்து, சந்தேகமடைந்த தல்ஜீத், நொய்டா செக்டர்-36 இல் உள்ள சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணை செய்ததில், டேட்டிங் செயலியில் உள்ள அனிதாவின் ப்ரொபைல் போலியானது என்று தெரியவந்தது. பணம் எந்த கணக்குகளுக்கு மாற்றப்பட்டது என்பது குறித்த தகவல்களை போலீசார் இப்போது சேகரிக்க முயற்சித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

