![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
நேதாஜியின் இறப்பில் விலகாத மர்மம்...டிஎன்ஏ சோதனை நடத்த மகள் அனிதா போஸ் கோரிக்கை
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டதாக அவரின் மகள் அனிதா போஸ் பிஃபாஃப் தெரிவித்துள்ளார்.
![நேதாஜியின் இறப்பில் விலகாத மர்மம்...டிஎன்ஏ சோதனை நடத்த மகள் அனிதா போஸ் கோரிக்கை Netaji Remains Should Be Brought Back To India Says His Daughter நேதாஜியின் இறப்பில் விலகாத மர்மம்...டிஎன்ஏ சோதனை நடத்த மகள் அனிதா போஸ் கோரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/15/4cb58c9240ea912bf2848540626aa4941660557840491224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டதாக அவரின் மகள் அனிதா போஸ் பிஃபாஃப் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 18, 1945 அன்று அவர் இறந்தது குறித்து இன்னும் சந்தேகம் இருப்பவர்களுக்கு டிஎன்ஏ சோதனை மூலம் பதில் அளிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பிறந்து தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் அனிதா போஸ் இதுகுறித்து கூறுகையில், "டோக்கியோவில் உள்ள ரென்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ள எச்சங்கள் நேதாஜியினுடையது என்பதற்கான அறிவியல் ஆதாரத்தைப் பெற DNA சோதனை வாய்ப்பளிக்கிறது. ஜப்பானிய அரசு அத்தகைய நடைமுறைக்கு ஒப்புக் கொண்டுள்ளது" என்றார்.
நேதாஜியின் ஒரே மகளான அனிதா போஸ் வெளியிட்ட அறிக்கையில், "எனது தந்தை சுதந்திரத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க என்பதால், குறைந்தபட்சம் அவரது அஸ்தியாவது இந்திய மண்ணுக்கு திரும்பும் நேரம் இது.
நவீன தொழில்நுட்பம் இப்போது அதிநவீன டிஎன்ஏ சோதனைக்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது. டிஎன்ஏவை எச்சங்களிலிருந்து பிரித்தெடுக்க முடியும். நேதாஜி ஆகஸ்ட் 18, 1945 இல் இறந்தார் என்று சந்தேகிப்பவர்களுக்கு, டோக்கியோவில் உள்ள ரென்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ள எச்சங்கள் அவருடையது என்பதற்கான அறிவியல் ஆதாரத்தைப் பெற இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
ரென்கோஜி கோயிலின் பூசாரியும் ஜப்பானிய அரசும் அத்தகைய சோதனைக்கு ஒப்புக்கொண்டது நேதாஜியின் மரணம் தொடர்பான முந்தைய இந்திய அரசின் விசாரணை ஆவணங்களின் (நீதிபதி முகர்ஜி விசாரணை ஆணையம்) மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே இறுதியாக அவரை தாய் நாட்டிற்கு அழைத்து வர தயாராக இருக்கிறோம்! நேதாஜிக்கு தேசத்தின் சுதந்திரத்தை விட அவரது வாழ்க்கையில் முக்கியமானது எதுவும் இல்லை. அந்நிய ஆட்சி இல்லாத இந்தியாவில் வாழ்வதை விட அவர் ஏங்கியது வேறு எதுவும் இல்லை! சுதந்திரத்தின் மகிழ்ச்சியை அனுபவித்து அவர் வாழவில்லை என்பதால், குறைந்தபட்சம் அவரது எச்சங்களாவது இந்திய மண்ணுக்குத் திரும்ப வேண்டிய நேரம் இது.
நேதாஜியின் ஒரே குழந்தை என்ற முறையில், சுதந்திரமாகத் தன் நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற அவரது கடைசி ஆசை இந்த வடிவத்தில் நிறைவேறுவதையும், அவருக்கு மரியாதை செலுத்துவதற்கான உரிய சடங்குகள் செய்யப்படுவதையும் உறுதி செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார்.
1945 ஆகஸ்ட் 18 அன்று தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்தார் என்று பரவலாக நம்பப்பட்டாலும் அவரது மரணம் மர்மமாகவே உள்ளது. ஆகஸ்ட் 18, 1945 அன்று தைபேயில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என இரண்டு விசாரணைக் கமிஷன்கள் அறிக்கை வெளியிட்ட நிலையில், நீதிபதி எம்.கே.முகர்ஜி தலைமையிலான மூன்றாவது விசாரணைக் குழு அதை எதிர்த்து விபத்திற்கு பிறகும் போஸ் உயிருடன் இருந்ததாக தகவல் வெளியிட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)