![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Modi Replies To Obama: ”இந்தியாவில் இதற்கு இடமே இல்லை”, ஒபாமாவுக்கு பதில் கொடுத்த பிரதமர் மோடி..
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு, பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.
![Modi Replies To Obama: ”இந்தியாவில் இதற்கு இடமே இல்லை”, ஒபாமாவுக்கு பதில் கொடுத்த பிரதமர் மோடி.. former us president barack obama raised question on security of muslim in india pm modi replied back Modi Replies To Obama: ”இந்தியாவில் இதற்கு இடமே இல்லை”, ஒபாமாவுக்கு பதில் கொடுத்த பிரதமர் மோடி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/6abbcc6c72b22f3a5a57215a205d9c931687489653080732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு, பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.
கிரீஸில் சுற்றுப்பயணம்:
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபமா கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களை ஒபாமா சந்தித்து வருகிறார். இந்த நிலையில் தான், தனியார் ஊடகம் ஒன்றிற்கு ஒபாமா பேட்டியளித்தார்.
பிரதமரிடம் என்ன பேச வேண்டும்?
பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஒபாமா இந்த பேட்டியை அளித்துள்ளார். அப்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் "எதேச்சதிகார... தாராளவாத ஜனநாயகவாதி" என்று கருதப்படும் பிரதமர் மோடி போன்ற தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் எத்தகைய பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஒபாமா சொன்ன பதில்:
இதற்கு பதிலளித்த ஒபாமா “நான் அமெரிக்க அதிபராக இருந்த போது எதிர்கொண்ட சிக்கலான பல தருணங்களில் ஒன்று ஜனநாயக விரோத தலைவர்கள் மற்றும் சர்வாதிகளுடனான சந்திப்பாகும். அதிபர் எனும் பொறுப்பு அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்ததுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் தோழமையாக இருக்கும் சக்திகள் தனிப்பட்ட முறையில் எனக்கு அழுத்தங்களை கொடுக்கும். சீனாவை எடுத்துக்கொண்டால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்ய வேண்டியிருந்தது. இதில் ஏராளமான பொருளாதார நலன்கள் இருக்கின்றன. இப்படியான தருணங்களில் அமெரிக்காவின் அதிபராக இருப்பவர்கள் ஏற்கெனவே வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். அல்லது சரிபடாத விஷயங்களை எதிர்க்க வேண்டும். இதுவும் அதிபராக இருந்த காலத்தில் நான் எதிர்கொண்ட சவாலாகும். எங்கு எதை ஏற்க வேண்டும், எங்கு எதை எதிர்க்க வேண்டும் என்கிற புரிதல் அவசியமாகும்.
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அவசியம்:
தொடர்ந்து மோடி மற்றும் பைடன் இடையேயான சந்திப்பு குறித்து பேசிய அவர், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. நான் நன்கு அறிந்த பிரதமர் மோடியுடன் உரையாடி இருந்தால், ”இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதே எனது பேச்சுவார்த்தையின் முக்கிய பகுதியாக இருந்திருக்கும். அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது. இந்த விஷயங்களைப் பற்றி நேர்மையாகப் பேசுவதே முக்கியம் என்று நான் கருதுகிறேன்" என்று ஒபாமா பேசியுள்ளார்.
பிரதமர் மோடி தந்த பதில்:
இதனிடையே வெள்ளை மாளிகை வளாகத்தில் அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்தியா ஜனநாயக நாடு என மக்கள் கூறும் நிலையில் அங்குள்ள சிறுபான்மையினர்கள் பாதுகாப்பு எப்படி உள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மோடி “இந்தியா ஜனநாயகமானது என்று மக்கள் சொல்வதாக சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சிலர் வேண்டாம் என்று சொன்னாலும் இந்தியா ஜனநாயக நாடுதான். அதிபர் பைடன் கூறியது போல், ஜனநாயகம் என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் டிஎன்ஏவில் உள்ளது. நாங்கள் ஜனநாயகத்தை பின்பற்றியே வாழ்கிறோம் . அதை நம் முன்னோர்கள் வார்த்தைகளாகச் சொல்லியிருக்கிறார்கள். நமது அரசியல் சாசனமும், நமது அரசாங்கமும், ஜனநாயகத்தை வழங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. எனவே இந்தியாவில் சாதி, மத பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை” என மோடி விளக்கமளித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)