VS Achuthanandan Passes Away: கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு; மக்கள் மனதை வென்ற அரசியல் தலைவர்
கேரளாவில், மக்களின் மனதை வென்று தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருந்த முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன், தனது 101-வது வயதில் காலமானார். அவரது அரசியல் பயணம் குறித்து தெரியுமா.?

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 101. கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அச்சுதானந்தன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிப்பு
கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் வென்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அச்சுதானந்தன், பொது வாழ்க்கையிலிருந்து விலகினார். அதன் பின்னர், கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் உடல்நிலை சீராவதில் பின்னடைவு எற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதன்பின் அவரது உடல்நிலை மிகவும் கவலைகிடமாக இருந்த நிலையில், இன்று தனது 101-வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
அரசியல் வாழ்க்கை
வி.எஸ். அச்சுதானந்தன், 1962-ல் இந்தியா - சீனா போருக்குப் பின், கம்யூனிஸ்ட் கட்சி 2-ஆக உடைந்த நிலையில், 1964-ல் வெளிநடப்பு செய்து, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியை உருவாக்கிய பிரிக்கப்படாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 32 தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
அதன் பின்னர், 2006 முதல் 2011 வரை கேரள மாநில முதல்வராக பதவி வகித்தவர். அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன் நல்ல நடபில் இருந்தவர் அச்சுதானந்தன்.
1991-1996, 2001-2006, 2011-2016 என 3 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர் அச்சுதானந்தன். 7 முறை கேரள சட்டப்பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு கொண்ட அவர், மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் ஃபீரோ உறுப்பினராகவும் இருந்தவர். கூடுதலாக, கேரள நிர்வாக சீர்த்திருத்த ஆணையத்தின் தலைவராகவும் விளங்கினார்.
தனது 80 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், போராட்ட மனப்பான்மையின் சின்னமாக அறியப்பட்டார் அச்சுதானந்தன். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்து, அவரது வாழ்க்கை நவீன கேரளாவின் சமூக, அரசியல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
கேரள மாநிலம் கூட்டணி அரசியலில் நுழைந்த காலமான 1980 முதல் 1992 வரை, சிபிஐ(எம்) மாநிலச் செயலாளராக இருந்தார் அச்சுதானந்தன். பின்னர், 1996 முதல் 2000 வரை இடது ஜனநாயக முன்னயினி ஒருங்கிணைப்பாராக இருந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை - அரசியலில் நுழைந்தது எப்படி?
1923 அக்டோபர் 20-ம் தேதி, கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்ரா கிராமத்தில் பிறந்த அச்சுதானந்தன், 4 வயதில் தனது தாயார் அக்காமாவையும், அதைத் தொடர்ந்து 11-வது வயதில் ததந்தை சங்கரனையும் இழந்தார்.
அதன் பிறகு, தான் படித்துக்கொண்டிருந்த 7-ம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மூத்த சகோதரர் கங்காதரனின் தையல் கடையில் வேலை செய்துள்ளார். அங்கு வரும் உள்ளூர்வாசிகளின் அரசியல் உரையாடல்களை கேட்டு, பல ஆண்டுகளாக அரசியல் ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட அவர், திருவிதாங்கூர் மாநில காங்கிரஸில் சேர்ந்துள்ளார்.
17 வயதை எட்டிய நிலையில், அவர் பிரிக்கப்படாத இந்திய கம்யூனிஸ்ட்(சிபிஐ) கட்சியில் உறுப்பினராகியுள்ளார். தனது சொந்த மாவட்டமான ஆலப்புழாவில், மீனவர்கள், கள் இறக்குபவர்கள் மற்றும் தென்னை மரம் ஏறுபவர்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக, இளம் கம்யூனிஸ்ட் தலைவராக அச்சுதானந்தன் நியமிக்கப்பட்டார்.
1940-ல், அவரது அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. ஆலப்புழாவில் உள்ள ஒரு தென்னை நார் தொழிற்சாலையில் சேர்ந்தபோது, அங்கு, கம்யூனிஸ்ட் தலைவர் தோழல் பி. கிருஷ்ண பிள்ளை, தொழிலாளர்களை இயக்கத்திற்கு நெருக்கமாக கொண்டுவந்து, அவர்களின் உரிமைக்காக போராட வலியுறுத்துமாறு அச்சுதானந்தனை வலியுறுத்தியுள்ளார்.
அது முதல், படிப்படியாக சில கிளர்ச்சிகள், போராட்டங்களில் முக்கிய பங்காற்றிய அவர், ஒரு கட்டத்தில் காவல்துறையின் கைதை தவிர்க்க தலைமறைவாகியுள்ளார். பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார். பின்னர், சுதந்திரப் போராட்டத்தின் போதும், அதற்குப் பின்னரும், கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சி.பி.ஐ-யின் தலைவராக உயர்ந்தார் அச்சுதானந்தன். 1954-ல் சிபிஐ மாநிலக் குழுவில் உறுப்பினரானார். பின்னர் படிப்படியாக பல்வேறு கட்டங்களைக் கடந்து, கேரளாவின் முதலமைச்சராக உயர்ந்தார்.





















