இனி, மாசம் ரூ 2,500 கிடைக்கப்போகுது.. சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு ஜாக்பாட் கொடுத்த பாஜக
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தகுதி உடைய பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில், டெல்லியில் சமீபத்தில் பொறுப்பேற்ற பாஜக அரசு, தகுதி உடைய பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு, இந்த திட்டத்தை அமல்படுத்தாமல் பாஜக அரசு தாமதம் செய்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி விமர்சித்த நிலையில், பெண்களுக்கான நிதி உதவி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு:
டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடித்தது. கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி பெரும் வெற்றியை பதிவு செய்தது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல், இடையில் ஓராண்டை தவிர்த்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி.
பாஜக மேற்கொண்ட தீவிரமான பிரச்சாரத்தால் டெல்லி தேர்தலில் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களே தோல்வியை சந்தித்தனர். பாஜகவின் வெற்றிக்கு அவர்கள் அளித்த வாக்குறுதியும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில, தங்களின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்ற உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. தகுதி உடைய பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வெளியிட்ட அறிவிப்பில், "முன்னதாக நாங்கள் ஒரு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினோம்.
இனி, மாதம் மாதம் ரூ. 2500:
எங்கள் (தேர்தல்) அறிக்கையில் (ஆளும் பாஜக) அளித்த வாக்குறுதிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் ஏழைப் பெண்களுக்கு ஆதரவளிக்கும் திட்டத்திற்கு அது ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிட, எனது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்கள் ஆஷிஷ் சூட், பர்வேஷ் வர்மா மற்றும் கபில் மிஸ்ரா ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக ஒரு பிரத்யேக போர்டல் தொடங்கப்படும்" என்றார்.
தகுதி உடைய பெண்களுக்கு மாதம் 2,100 ரூபாய் வழங்கப்படும் என ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. ஆனால், அதைவிட அதிகமாக 2,500 ரூபாய் வழங்கப்படும் என பாஜக அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பாஜக, இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் தாமதம் செய்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி விமர்சித்த நிலையில், பெண்களுக்கான நிதி உதவி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

