மும்பையில் இருந்து சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட சட்ட விரோத உடல்வலி நிவாரணி மாத்திரைகள் !!
சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த வழக்கில் ஒருவர் கைது. 50 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

சட்ட விரோத உடல் வலி மாத்திரை
சென்னை ஐஸ் அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கடந்த 26.12.2025 அன்று கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு அருகில் சட்ட விரோத மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதை கண்காணித்த போலீசார் , சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த முனீர் பாஷா ( வயது 27 ) மற்றும் சையது பஷீர் ( வயது 20 ) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 17 வயதுடைய இளஞ்சிறாரிடம் போலீசார் விசாரணை செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 3,630 எண்ணிக்கைகள் கொண்ட TYDOL மற்றும் NITRAZEPAM உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை மும்பையிலிருந்து வாங்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் காவல் குழுவினர் இவ்வழக்கில் தொடர்புடைய மீனா ( வயது 41 ) மற்றும் இவரது மகன் சீனி (எ) அண்டா சீனு ( வயது 25 ) ஆகியோரை கைது செய்து, 100 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
ஐஸ்அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு சரவணன் (எ) வெள்ளை சரவணன் ( வயது 21 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 எண்ணிக்கைகள் கொண்ட TYDOL உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் சரவணன் மீது ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சரவணன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு நபர்களை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்























