![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Bahubali Elephant : கோவை அருகே காயமடைந்த ’பாகுபலி’ காட்டு யானை ; சிகிச்சையளிக்க வனத்துறையினர் நடவடிக்கை
காட்டு யானைகள் மோதிக்கொண்டதால் பாகுபலி காட்டு யானைக்கு காயம் ஏற்பட்டதா அல்லது அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடி வெடித்து காயம் ஏற்பட்டதா என்று வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![Bahubali Elephant : கோவை அருகே காயமடைந்த ’பாகுபலி’ காட்டு யானை ; சிகிச்சையளிக்க வனத்துறையினர் நடவடிக்கை The forest department has taken action to treat the injured Bahubali wild elephant near Coimbatore Bahubali Elephant : கோவை அருகே காயமடைந்த ’பாகுபலி’ காட்டு யானை ; சிகிச்சையளிக்க வனத்துறையினர் நடவடிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/0966333f7fde1bab7fa6cf543ff2c50f1687438595830188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் மனித வனவிலங்குகள் மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமுகை வனப்பகுதியில் யானை கூட்டங்களோடு ஒன்று சேராமல் தனியாக ஒரு ஆண் காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. இந்த யானையின் கம்பீர தோற்றத்தை கண்ட பொதுமக்கள் யானைக்கு பாகுபலி என்று பெயரிட்டு செல்லமாக அழைத்து வந்தனர்.
இந்த பாகுபலி காட்டு யானை இதுநாள் வரை பொதுமக்களை தாக்கி உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியது இல்லை. பொதுமக்களின் உடைமைகளுக்கு சேதம் விளைவித்ததில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பாகுபலி காட்டு யானையால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்க விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். பாகுபலி காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதை தடுக்கவும், மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டவும் பாகுபலி காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்த தேவையான நடவடிக்கைகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினர் மேற்கொண்டனர்.
அப்போது மயக்க மருந்து ஊசி செலுத்தி பிடிக்க முயன்ற போது கண்ணிமைக்கும் நேரத்தில் பாகுபலி காட்டு யானை தப்பி வனப்பகுதியில் வேகமாக சென்று மறைந்தது. மேலும் மழைக்காலம் தொடங்கியதால் பாகுபலி காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாகுபலி காட்டு யானையின் நடமாட்டம் வனப்பகுதியில் நீண்ட நாட்களாக இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் பாகுபலி காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேட்டுப்பாளையம் உதகை சாலை மற்றும் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் செல்வதை பாகுபலி காட்டு யானை வழக்கமாக கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஜக்கனாரி காப்பு காட்டில் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகுபலி காட்டு யானை வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது.
இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலை அடுத்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் 2 குழுக்கள் அமைத்து பாகுபலி காட்டு யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால் பாகுபலி காட்டு யானைக்கு காயம் ஏற்பட்டதா அல்லது அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடி வெடித்து காயம் ஏற்பட்டதா என்று வனத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாகுபலி காட்டு யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காயம்பட்ட பாகுபலி காட்டு யானைக்கு பலாப்பழம், தர்ப்பூசணி ஆகிய பழங்களில் மருந்து மாத்திரைகள் வைத்து சிகிச்சை அளிக்கவும் தயார் நிலையில் உள்ளனர். பாகுபலியின் நடமாட்டத்தை நேரடியாக கண்டறிந்த பின்னர் தான் வாய்ப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு உண்மையான காரணம் தெரியவரும். இந்த நிலையில் வனப்பகுதியில் அவுட்டுக்காய் உள்ளிட்ட ஏதாவது வெடிபொருள்கள் உள்ளதா என்பதை கண்டறிவதற்காக கோவை போளூவாம்பட்டி வனச்சரகத்தில் இருந்து பைரவன், வளவன் ஆகிய இரு மோப்ப நாய்கள் மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கு வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அந்த இரண்டு மோப்ப நாய்களும் சமயபுரம் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு யானையின் ரத்தம் சிதறி கிடந்த இடங்களில் இந்த மோப்ப கொண்டு சோதனை செய்யப்பட்டது.
Join Us on Telegram: https://t.me/abpnaduofficial
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)