பொதுவேலை நிறுத்தம் எதிரொலி... கேரளா செல்ல முடியாமல் கோவை பேருந்து நிலையத்தில் பயணிகள் தவிப்பு...
பொதுவேலை நிறுத்தம் எதிரொலி: கோவை–கேரளா அரசு பேருந்து சேவைகள் முற்றிலும் பாதிப்பு

நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் பொதுவேலை நிறுத்தத்திற்கு கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு அளித்துள்ளனர். இதன் காரணமாக, கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் அரசு பேருந்து சேவைகள் இன்று முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை. வேலைநிறுத்தத்தின் எதிரொலியாக, தமிழ்நாடு–கேரளா எல்லைப்பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
பொதுவேலை நிறுத்தம் தாக்கம்
இதனால், கோவை உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அதிகாலை முதலே கேரளா நோக்கி பயணம் மேற்கொள்ள வந்த பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். முன்பதிவு செய்து இருந்த பயணிகள், தினசரி வேலைக்குச் செல்வோர், மருத்துவ மற்றும் அவசர தேவைகளுக்காக பயணம் மேற்கொள்ள வந்த பொதுமக்கள் மாற்று போக்குவரத்தைத் தேடி அலைந்தனர். சிலர் தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்களை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டனர்.
இதற்கிடையே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் கேரளா எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. எல்லையைத் தாண்டி கேரள பகுதிகளுக்கு சேவை வழங்கப்படாததால், எல்லைப்பகுதிகளில் பயணிகள் அதிகமாக திரண்டதால் கூடுதல் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுவேலை நிறுத்தம் காரணமாக இன்று முழுவதும் இந்த சேவை பாதிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் பயணம் மேற்கொள்ளும் முன், அரசு பேருந்து சேவைகளின் நிலவரத்தை உறுதி செய்து கொள்ளுமாறு போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.























