கடை மூடல்... விற்பனை ஜோர்... மகாவீர் ஜெயந்தியிலும் கள்ளச்சந்தையில் மது விற்பனை...
மகாவீர் ஜெயந்தி தினத்திலும் கள்ளச்சந்தையில் மது விற்பனை

கோவை: மகாவீர் ஜெயந்தி தினத்திலும் கள்ளச்சந்தையில் மது விற்பனை – வைரலாகும் வீடியோ
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோவையில் தடையை மீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் இணைந்த பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புகார் இருந்தும் நடவடிக்கை இல்லை
இந்த நிலையில், கோவை குனியமுத்தூர் – பாலக்காடு சாலையில் உள்ள ஒரு தனியார் பாரில் மறைமுகமாக மது விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைகள் மூடப்பட்டிருந்த போதிலும், அந்த பாரின் உட்புறம் மற்றும் மறைவான இடங்களில் அதிக விலையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
புனித தினமான மகாவீர் ஜெயந்தி நாளிலேயே, அதுவும் பிரதான சாலையில் இவ்வாறு சட்டவிரோத விற்பனை நடைபெற்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை சிலர் செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் நீண்ட நேரமாகியும் காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில், மது விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாறு வெளிப்படையாக கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.























