2.5 கி.மீ முன்பே எச்சரிக்கை... யானைகளை காப்பாற்ற புதிய ஹைடெக் ட்ரிக்...
ரயில்களில் வன விலங்குகள் அடிபடாமல் இருக்கவும், அச்சமின்றி ரயில் தண்டவாளத்தை கடக்கவும் புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மதுக்கரை வனப்பகுதி வழியாக செல்லும் ரயில்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிபடாமல் தடுக்க புதிய முயற்சியாக டிரோன் கண்காணிப்பு பிரிவை வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
தமிழக கேரள எல்லையான மதுக்கரை வனப்பகுதியில் ரயில் பாதையில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இதை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் ரயில் பாதையில் பொருத்தப்பட்டது. இந்த முயற்சி பெரிய அளவில் பலன் கொடுத்தது . இந்நிலையில் வனவிலங்குகள் சார்ந்த பாதுகாப்பை மேலும் பலப்படுத்த புதிய முயற்சியாக டிரோன் கண்காணிப்பு பிரிவு திறக்கப்பட்டது. வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கோவை மதுக்கரையில் ட்ரோன் கண்காணிப்பு பிரிவை தொடங்கி வைத்து கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகளை பார்வையிட்டார். 8.67 கோடி செலவில் வனப்படை நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு ட்ரோன் கண்காணிப்பு பிரிவு திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு வளையம்
இது குறித்து பேசிய வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் இதற்காக இளைஞர்கள் பணி புரிந்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார். இதற்காக வனத்துறை எடுக்கும் நடவடிக்கைகளை பார்த்து மற்ற மாநிலத்தில் இருந்தும் இதுகுறித்த ஆலோசனைகளை தமிழக அரசிடம் கேட்பதாகவும் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். தற்போதைக்கு, 3 டிரோன்கள் பயன்படுத்த படுவதாகவும் மேலும் அவர், தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பேட்டியளித்த கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடாக டிரோன் பயன்பாடு கொண்டு வந்து இருப்பது, யானைகள் ரயில் தண்டவாளத்தின் அருகில் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். 2.5 கி.மீ முன்பாகவே யானை வருவதை கண்டறிய முடியும் என தெரிவித்த அவர், கண்காணிப்பு கேமராக்கள் இரண்டு தண்டவாளங்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் எனவும், முதல் முறையாக கோவையில் தான் இந்த டிரோன் கண்காணிப்பு துவங்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.யானை வேகமாக நகரும் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க இந்த கூடுதல் பாதுகாப்பு கைகொடுக்கும் என சுப்ரியா சாகு தெரிவித்தார்.























