“வண்டியில் ஓவர் சத்தம் வந்தா அவ்ளோ தான்” – வாகனங்களை பிடித்து கோவை போலீஸ் கெடுபிடி
அதிக ஒலி எழுப்பும் சைலன்சர், ஹாரன் பொருத்திய வாகனங்களுக்கு அபராதம் – போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை.

கோவை மாநகரில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கெதிராக போக்குவரத்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, பொதுமக்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன் மற்றும் சைலன்சர்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி அதிக சத்தம் எழுப்பும் ஹாரன், சைலன்சர்களை வாகனங்களில் பொருத்திக் கொண்டு இயக்கி வருவது தொடர்கதையாக உள்ளது.
சைலன்சர் சத்தத்துக்கு கடும் நடவடிக்கை
இதனால், சாலைப் பாதுகாப்பு மட்டுமின்றி பொதுமக்களின் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் அதிக சத்தம் காரணமாக அவதிக்குள்ளாகுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் நகரின் முக்கிய பகுதிகளில் திடீர் தணிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிக ஒலி எழுப்பும் ஹாரன் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பொருத்தப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கண்டறியப்பட்டன. விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், பறிமுதல் செய்யப்பட்ட ஹாரன் மற்றும் சைலன்சர்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கோவையில் தீவிர தணிக்கை
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், வாகன ஓட்டிகள் அனைவரும் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை கடைபிடித்து, விதிக்கப்பட்ட அளவிலான ஹாரன் மற்றும் சைலன்சர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களால் ஏற்படும் ஒலி மாசை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் போக்குவரத்து காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.























