Myv3 Ads: மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்திடம் போலீசார் விசாரணை
தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது.
![Myv3 Ads: மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்திடம் போலீசார் விசாரணை Coimbatore news Cyber crime Police interrogated Sakthi Anand, owner of MyV3 Ads - TNN Myv3 Ads: மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்திடம் போலீசார் விசாரணை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/b3fcd28253f7ecbb9dbf98d2179fd7851707132470550188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவையை தலைமையிடமாக கொண்டு மைவி3 ஏட்ஸ் என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூ டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சகணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதம்மாதம் பணம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள புறவழிச்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் குவிந்தனர். அப்போது அந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும், தவறான புகார் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சக்தி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது இடத்தில் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி அளித்த புகாரின் அடிப்படையில் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மீது சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மைவி3 ஏட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்த் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். அதன்படி சக்தி ஆனந்த் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைமில் சக்தி ஆனந்த் விசாரணைக்கு ஆஜரானர். முதலீடு செய்பவர்களுக்கு எவ்வாறு பணம் வழங்கப்படுகிறது உள்ளிட்டவை குறித்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)