![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Legends of Coimbatore: கோவையின் மாமனிதர்கள் வரலாறை விளக்கும் சாலை ; மாநகராட்சியின் அசத்தல் முயற்சி!
கோவை வளர்ச்சிக்கு காரணமாக திகழ்ந்தவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், தொழில் முன்னோடிகள், சமூக பணியாற்றியவர்கள் உள்ளிட்ட 33 தலைவர்களின் உருவப்படங்கள் அவர்களின் வரலாறுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
![Legends of Coimbatore: கோவையின் மாமனிதர்கள் வரலாறை விளக்கும் சாலை ; மாநகராட்சியின் அசத்தல் முயற்சி! Coimbatore News Corporation Taken Initative to Illustrate History of Legendary Persons on Road Sides TNN Legends of Coimbatore: கோவையின் மாமனிதர்கள் வரலாறை விளக்கும் சாலை ; மாநகராட்சியின் அசத்தல் முயற்சி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/3dff16146116d51588951f271b0584391692263656720188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பந்தய சாலை, ஆர்.எஸ்.புரம், குளக்கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை கவரும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள டி.பி. சாலை எனப்படும் திவான் பகதூர் சாலையின் இருபுறமும் கோவையின் மாமனிதர்களை நினைவுகூரும் சாலையாக கோவை மாநகராட்சி மாற்றியுள்ளது. சாலையின் இருபுறமும் கோவையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், தொழில் முன்னோடிகள், சமூக பணியாற்றியவர்கள் என 33 தலைவர்களின் உருவப்படங்கள் ‘லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர்’ என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அவர்களை பற்றி அறியும் வகையில் அவர்களின் சுருக்கமான வரலாறு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இடம்பெற்றுள்ளது. இது அப்பகுதி வழியாக செல்பவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கோவையின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்கள்
நவீன கோவையை உருவாக்கியவர்களில் முதன்மையானவரான தொழிலதிபர் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ், சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சரும், நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவருமான டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டி, முதல் நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் இருந்து போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், கூட்டுறவு இயக்கத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தவருமான டி.ஏ. ராமலிங்கம் செட்டியார், மெட்ராஸ் பிரசிடெண்ட்சியின் கல்வி அமைச்சராக இருந்த டி.எஸ். அவினாசிலிங்கம், விஞ்ஞானி, தொழில் முனைவோர், பொறியாளர், கோவையில் பேருந்து சேவையை துவக்கியவர் என பன்முக தன்மை கொண்ட ஜி.டி.நாயுடு, கோவையின் அடையாளமாக உள்ள டவுன்ஹால் மணிக்கூண்டு கோவை நகராட்சி தலைவராக இருந்த ராவ் பகதூர் ஏ.டி. திருவேங்கடசாமி நினைவாக அமைக்கப்பட்டது குறித்த சுவராஜ்ஜியமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
திரும்பி பார்க்க வைத்த சினிமா முன்னோடிகள்
கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கை உருவாக்கிய சாமிகண்னு வின்செண்ட், திரைப்படத் தயாரிப்பாளரும், மருதமலை உள்ளிட்ட முருகன் கோவில்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய சாண்டோ சின்னப்பா தேவர், செண்ட்ரல் ஸ்டுடியோஸ், பஷிராஜா ஸ்டுடியோஸ், சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோஸ் ஆகிய 3 திரைப்பட ஸ்டுடியோக்கள் உருவாகக் காரணமாக இருந்தவரும், மலைக்கள்ளன் திரைப்பட தயாரிப்பாளருமான எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு ஆகிய சினிமா துறையின் முன்னோடிகள் நினைவுகூரப்பட்டுள்ளனர்.
அதேபோல கோவை மண்டலத்தில் இருந்து திவான் பகதூர் விருது பெற்ற முதல் நபரான சூலூர் லட்சுமி நரசிம்ம ஐயர், சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தி பூங்காவை உருவாக்கியவருமான கோவை சுப்ரி, மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் உறுப்பினரும், கோவையின் முக்கிய குடிநீர் ஆதராமாக இருக்கும் பில்லூர் நீரை கோவைக்கு கொண்டு வரும் திட்டத்தை முன்மொழிந்தவருமான திவான் பகதூர் சி.வி. வெங்கடரமணா ஐயங்கார், விஞ்ஞானியும் கோவையில் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்த டாக்டர் ஜே துல்ஜராம் ராவ், கோவையை கல்வி நகரமாக மாற்றுவதில் முன்னோடியாக இருந்தவரும், பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்கள் உருவாக வழிவகுத்தவருமான பி.எஸ். கோவிந்தசாமி நாயுடு, குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை செய்த எஸ். செங்காளிப்பன் ஆகியோர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
கோவையை வளார்த்த தொழில் முன்னோடிகள்
நகைகளின் உத்தரவாதத்தின் அடையாளமாக ‘பி.ஏ.ஆர்’ என பொறிக்க செய்தவரும், கோவையை நகைகளுக்கான அடையாளமாக இடம் பிடிக்க செய்தவருமான பி.ஏ. ராஜூ செட்டியார், சட்டசபை உறுப்பினரும், தொழிலதிபருமான என்.மகாலிங்கம், கோவையின் தொழில் துறையில் புதுமைகளை புகுத்திய தொழில் முனைவோரும், தென்னிந்தியாவில் பருத்திக் கழிவுகளுக்கான வணிகச் சந்தையை கண்டறிந்தவருமான கோகுல் தாஸ் துளசி தாஸ், கோவையில் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் மையத்தை உருவாக்கியவரும், பல கூட்டுறவு சங்கங்களை நிறுவியவருமான எம்.எஸ். பழனியப்ப முதலியார், மலிவு விலையில் தரமான உணவளித்த பத்ம ஸ்ரீ சாந்தி பி. சுப்ரமணியம், பெண் கல்விக்கு பணியாற்றிய டி.வி.எம். தில்லை அம்மாள், சாவித்திரி உள்ளிட்டோரின் வரலாற்று தகவல்கள் உருவப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து ஏபிபிநாடுவிடம் பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், "கோவை மாநகரம் பல்வேறு நபர்களின் பங்களிப்பினால் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உயர்ந்துள்ளது. மாதிரி சாலையான டி.பி. சாலையில் இரு புறமும் இந்த நகரம் உருவாக பங்களித்தவர்களை நினைவு கூரும் வகையிலும், அவர்கள் குறித்து அனைத்து மக்களும் தெரிந்து தெரிந்து கொள்ளும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது 30 க்கும் மேற்பட்ட தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 32 இடங்களில் விடுபட்ட தலைவர்கள், கோவையின் அடையாளங்கள், தொன்மை சார்ந்த கட்டிடங்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் வைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
கோவையின் மாமனிதர்களின் வரலாறை பலரும் அறிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ள கோவை மாநகராட்சி முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)