பாதாள சாக்கடை குழியில் இளம் பெண் விழுந்த விவகாரம் ; ஒப்பந்ததாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
பாதாள சாக்கடை குழியில் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
![பாதாள சாக்கடை குழியில் இளம் பெண் விழுந்த விவகாரம் ; ஒப்பந்ததாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் Coimbatore news 50 thousand rupees fined to the contractor for the young woman falling into the underground sewer pit tnn பாதாள சாக்கடை குழியில் இளம் பெண் விழுந்த விவகாரம் ; ஒப்பந்ததாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/641ef3f6a0016489a996bfa721a38e681718696956194113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை காந்திபுரம் பகுதியில் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியில் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான காந்திபுரம் 100 அடி சாலையின் இரு புறங்களிலும் வணிக நிறுவனங்கள் உள்ளது. இப்பகுதியில் துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக கடைகள் இருக்கின்றன. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அப்பகுதி வந்து செல்கின்றன. வணிக நிறுவனங்களின் முன்பாகவே இரு புறங்களிலும் பாதாள சாக்கடைகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை தூர் வாரப்பட்டது.பாதாள சாக்கடை மூடிகள் சேதமடைந்து இருந்ததால், அவற்றை அகற்றிவிட்டு புதிய மூடிகள் பொறுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. 10 நாட்களாக பாதாள சாக்கடை குழிகள் திறந்த நிலையில் இருப்பது குறித்து பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகின்றது.
அபராதம் விதித்த ஆணையாளர்
இதனிடையே கடந்த 16 ம் தேதி மாலை அந்த வழியே நடந்த சென்ற இளம் பெண் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென குழிக்குள் தவறி விழுந்தார். காலில் பலத்த காயமடைந்த அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் சாக்கடை குழிக்குள் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் பெரிதான நிலையில், கோவை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதாள சாக்கடையின் அனைத்து குழிகளிலும் உடனடியாக சிலாப்புகள் போட்டு மூலம் குழிகளை மூடினர். பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னதாக பாதாள சாக்கடை குழிகளை மூட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்திய நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அவற்றை மூடி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல விபத்துகள் நடக்காமல் இருக்க சாக்கடைகளை துர்வாறினால் உடனடியாக குழிகளை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பெண் சாக்கடை குழியில் விழுந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் ஒப்பந்தக்காரருக்கு 50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் உதவி செயற்பொறியாளர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்தார். மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை பணிகள் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் எனவும், பணிகளை சரியாக செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)