DIG Vijayakumar Suicide: 'டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலைக்கு குடும்ப சூழலோ, பணிச்சுமையோ காரணமல்ல’ - ஏடிஜிபி அருண் விளக்கம்
விஜயகுமார் கடந்த சில வருடங்களாகவே மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஒசிடி என்ற மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருந்தார்.
![DIG Vijayakumar Suicide: 'டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலைக்கு குடும்ப சூழலோ, பணிச்சுமையோ காரணமல்ல’ - ஏடிஜிபி அருண் விளக்கம் Coimbatore DIG Vijayakumar Suicide ADGP Arun Explanation Family Environment Work Load Not Reason for Death TNN DIG Vijayakumar Suicide: 'டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலைக்கு குடும்ப சூழலோ, பணிச்சுமையோ காரணமல்ல’ - ஏடிஜிபி அருண் விளக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/07/663e2943cdc8475b30bf3b29202555de1688717613436113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை சரக டி.ஐ.ஜி.யாக விஜயகுமார் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது முகாம் அலுவலகத்தில் இன்று காலையில் விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை 6.50 மணியளவில் நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த போது, அவருடைய மெய் பாதுகாவலர் ரவி என்பவரிடம் கை துப்பாக்கியை வாங்கி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பந்தய சாலை காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மன அழுத்தம் காரணமாக விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தேனி மாவட்டம் அணைக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல் துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் விஜயகுமாரின் உடல் உடாற்கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஏடிஜிபி அருண், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “2009 ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக விஜயகுமார் பணியில் சேர்ந்தார். ஐபிஎஸ் அதிகாரியாக சேர்வதற்கு முன்பு, குரூப் 1 தேர்வு எழுதி டி.எஸ்.பியாக 2003 ம் ஆண்டு முதல் 6 வருடங்கள் பணிபுரிந்துள்ளார். விஜயகுமார் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிகாரி. பணிபுரிந்த இடங்களில் எல்லாம் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். இறந்ததற்கான காரணத்தை விசாரித்த பொழுது மன அழுத்தம் காரணம் என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.
விஜயகுமார் கடந்த சில வருடங்களாகவே மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அவரது மருத்துவர் அந்த தகவலை தெரிவித்தார். ஒசிடி என்ற மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவர் அதற்கான மருந்துகளை அவருக்கு கொடுத்து இருக்கிறார். மன அழுத்தம் காரணமாகவே கடந்த சில தினங்களாக மனைவியும், மகளும் கோவையில் அவருடன் இருந்திருக்கின்றனர். இதில் அரசியல் பண்ணுவதற்கு எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க மருத்துவ காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்பு. காவல்துறையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ காரணத்தால் தான் அவர் உயிரிழந்துள்ளார். மன உளைச்சல் என்பது வேறு. மன அழுத்தம் என்பது வேறு. அவரது மன அழுத்தத்திற்கு குடும்பச்சூழலோ, பணிச்சுமையோ காரணம் இல்லை. இது ஒரு மருத்துவ காரணமாகத்தான் தெரிகிறது. காவல் துறை மட்டுமல்ல, மருத்துவ பணியும் கூட இறுக்கமானது. இரண்டு வருடமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் சிகிச்சை பெற்று வருவது குறித்து எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. விசாரணைக்கு பின்னரே தெரியவந்துள்ளது.
அவரது பிரச்சினை குறித்து காவல் துறையிடம் தெரிவிக்கவில்லை. மேற்கு மண்டல ஐஜி, கோவை மாநகர காவல் ஆணையர் அனைவரும் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். மருத்துவரிடம் பேசும்போது ஓசிடி கம் டிப்ரஷன் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பல மருந்துகள் கொடுத்துள்ளார். குடும்பம் பணி இரண்டுமே அவரது மன அழுத்தத்திற்கு காரணம் அல்ல. அவருக்கு துப்பாக்கி கொடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)