![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: கோவையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கு - இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட இருவர் கைது
கோவையில் இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் திருப்பூர் இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
![Crime: கோவையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கு - இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட இருவர் கைது coimbatore crime news Two persons including a Hindu munnani leader arrested in two-wheeler theft case TNN Crime: கோவையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கு - இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட இருவர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/18/a430cd85d8878437dedf9ac5dc06b7f11684383231457188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாநகரப் பகுதிகளில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் நடந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் திருடப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் காவல் துறையினர் நேற்று இரவு இருவரையும் திருப்பூரில் வைத்து கைது செய்துள்ளனர். பாலகிருஷ்ணன் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் மாவட்ட துணை தலைவராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரிடம் இருந்து திருடப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடமும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் திருடப்பட்ட வாகனங்களை அடமானமாக வாங்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகன திருட்டு விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, சிறுமியின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (47) என்பவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, பாலியல் குற்றவாளி என்பதை உறுதி செய்து முருகன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் முருகனை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் எனவும், இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 4 போக்சோ குற்றவாளிகள் உட்பட 17 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)