![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: உள்ளாடைகள், மலக்குடலில் மறைத்து கடத்தல்..! கோவை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல்..
ஏர் அரேபியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
![Crime: உள்ளாடைகள், மலக்குடலில் மறைத்து கடத்தல்..! கோவை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல்.. 12 kg of smuggled gold seized at Coimbatore airport Crime: உள்ளாடைகள், மலக்குடலில் மறைத்து கடத்தல்..! கோவை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/0cc288e124fe015121ed840e3d9429351669125719421188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், 4 பேரை கைது செய்தனர்.
கடத்தல் தங்கம்:
கோவை சிட்ரா பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சர்ஷா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் அவ்வப்போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், துப்பாக்கிகள், தோட்டாக்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
மலக்குடலில் தங்கம்:
இந்நிலையில் ஷார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நேற்று கோவை விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை செய்யப்பட்டது. இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 18 பயணிகளை பிடித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உடமைகள், உள்ளாடைகள், பேண்ட் பாக்கெட், மலக்குடல் ஆகியவற்றில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து 12 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 6.5 கோடி ரூபாய் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சுரேஷ் குமார் (37), கடலூரைச் சேர்ந்த சங்கர் (29), பரமக்குடியைச் சேர்ந்த ராம் பிரபு (35), சேலத்தை சேர்ந்த குமரவேல் (44) ஆகிய 4 பேரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தங்க கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, இதேபோல வெளி நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்துள்ளார்களா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)