Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
சென்னை வேளச்சேரியில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 231 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க, முக்கிய இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கிண்டி சர்தார் படேல் சந்திப்பு முதல் குருநானக் கல்லூரி சந்திப்பு வரை, வேளச்சேரி பிரதான சாலையில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது சென்னை மாநகராட்சி சார்பில், மேம்பாலம் கட்டும் பணிகளுக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்களை காண்போம்.
பட்ஜெட்டில் அறிவிப்பு
2025-26-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில், வேளச்சேரி, கிண்டி பகுதியில் உள்ள 7 லட்சம் மக்கள் பயனடையும் வகையில், வேளச்சேரி குருநானக் கல்லூரி சாலை பகுதியில் 3 கிமீ தூரத்திற்கு 310 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான டெண்டரை சென்னை மாநகராட்சி கோரி இருக்கிறது.
வேளச்சேரியில் அமைக்கப்படும் 3 கி.மீ மேம்பாலம்
வேளச்சேரி பகுதியில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இந்த மேம்பாலத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மேம்பாலம் 310 கோடி ரூபாயில் கட்டப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி சார்பில், 231 கோடி ரூபாய்க்கு மட்டுமே டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம், கிண்டி சர்தார் படேல் சந்திப்பு முதல் குருநானக் கல்லூரி சந்திப்பு வரை, வேளச்சேரி பிரதான சாலையில் 3 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலம், 4 வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. கிண்டி மார்க்கத்தில் 2 வழிகளும், வேளச்சேரி மார்க்கத்தில் 2 வழிகளும் இருக்கும். இந்த மேம்பால சாலையின் அகலம் 12 மீட்டர்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் புதிய பாலம்
தற்போது கட்டப்பட உள்ள இந்த மேம்பாலத்தின் முழு நீள வடிவமைப்பு, ‘T‘ வடிவில் இருக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 1,100 சதுர மீட்டர் இடத்தை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. வேளச்சேரி 100 அடி சாலையில் இருந்து, ஃபீனிக்ஸ் மால் பக்கமாக திரும்பும் வாகனங்களால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெருக்கடியை குறைக்க புதிய மேம்பாலம் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய மேம்பாலம் மூலம், கிண்டி-வேளச்சேரி இடையே போக்குவரத்து சீரான இருக்கும். ஆனால், இந்த மேம்பாலப் பணிகள் முடிவடைய 2 ஆண்டுகள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. எனினும், டெண்டர் பணிகள் முடிக்கப்பட்டு, நிலம் கையப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முடிவடைய வேண்டும். அதன் பின்னரே பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும். அதில் எந்த தங்களும் இல்லாமல் பணிகள் நடைபெற்றால், 2027-ல் இந்த பாலப் பணிகள் முடிவடையும் என நம்பலாம்.





















