அலுவலக ஷட்டரை உடைத்து கொள்ளை !! ஆட்டோ சவாரியால் சிக்கிய கும்பல் !! எப்படி தெரியுமா ?
அலுவலகத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கில் 4 பேர் குஜராத்தில் கைது. பணம் , 3 செல்போன்கள் பறிமுதல்.

அலுவலக பூட்டு உடைப்பு
சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் டோம்னிக் ( வயது 38 ) என்பவர், மணப்பாக்கம் பார்த்தசாரதி தெரு, அஷ்டலஷ்மி அவென்யுவில் வெளிநாட்டு பண பரிமாற்ற (Foreign Money Exchange) அலுவலகம் நடத்தி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு வழக்கம் போல அலவலகத்தை பூட்டி விட்டு காலை அலுவலகத்தை திறக்க வந்த போது, அலுவலகத்தின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த பணம் ரூ.25,000 திருடு போயிருப்பதாக ஜோசப் டோம்னிக் நந்தம்பாக்கம் காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.
கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நந்தம்பாக்கம் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, சம்பவ இடத்தின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அந்த சி.சி.டிவி காட்சியில் , ஆட்டோவில் சவாரியாக வந்திறங்கிய வடமாநிலத்தைச் சேர்ந்த 4 நபர்கள் மேற்படி அலுவலகத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
ஆட்டோ சவாரியால் சிக்கிய கொள்ளையர்கள்
ஆட்டோவில் சவாரியாக வந்த நபர்கள் , ஆட்டோ ஓட்டுநருக்கு சவாரி பணத்தை செல்போன் மூலம் செலுத்திய செல் எண் விவரத்தை கொண்டு தீவிர விசாரணை செய்ததில், குற்றவாளிகள் குஜராத் மாநிலத்தில் பதுங்கியிருப்பதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து , நந்தம்பாக்கம் காவல் நிலைய தனிப்படையினர் குஜராத் மாநிலம், சூரத் சென்று முகாமிட்டு, சூரத் மாவட்ட காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து, திருட்டில் ஈடுபட்ட உத்திரபிரதேசத்தை சேர்ந்த ரிகு அமர்சிங் சௌஹான் ( வயது 27 ) , ஜுகேந்திர சிங் ( வயது 19 ) , அபிஷேக் சிங், ( வயது 20 ) , யோகேஷ்குமார் ( வயது 32 ) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, பணம் ரூ.23,000/- மீட்கப்பட்டு 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் ரிகு அமர்சிங் சௌஹான் மீது வெளி மாநிலத்தில் சுமார் 11 குற்ற வழக்குகளும், ஜுகேந்திர சிங் மீது 2 குற்ற வழக்குகளும், அபிஷேக் சிங் மீது 1 குற்ற வழக்கும் உள்ளது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட 4 பேரும் விசாரணைக்குப் பின்னர் சூரத் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகளுடன் சூரத்திலிருந்து, சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் 4 பேரையும் சென்னை ஆலந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.





















