Rain water ; வீடுகளில் மழை நீர் வடிகால் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் ?
வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டங்களின் அமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை காண்போம்

தமிழகத்தில் வீடுகள் உள்ளிட்ட அனைத்து வகை கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதிகளை அமைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இதன்படி புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதிகள் அமைக்கப்படுகின்றன. இதனால் புதிய கட்டடங்களில் இது போன்ற வசதிகள் இருந்தால் மட்டுமே பணி நிறைவு சான்றிதழ் அளிக்கப்படும் என்ற விதி உள்ளது. இதனால் கட்டுமான நிறுவனங்கள் , ஒப்பந்ததாரர்கள் இது விஷயத்தில் கவனமாக செயல்படுகின்றனர்.
ஆனால் , புதிய கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் மழை நீர் சேகரிப்பு மற்றும் வடிகால் அமைப்புகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. தனி வீடுகள் நிலையிலும் , இதில் உரிமையாளர்கள் அலட்சியத்துடன் செயல்படுவது மழைக் காலத்தில் பாதிப்பு ஏற்படும் போது தான் தெரிய வருகிறது.
குறிப்பாக புதிய வீடு வாங்கியவர்கள் அதை பயன்படுத்தும் நிலையில் , வடிகால் வசதிகளில் அடைப்பு போன்ற பிரச்னைகள் வராத நிலையில் அதில் மக்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால் அதிக மழை பெய்யும் போது தண்ணீர் வெளியேறாமல் கட்டடத்தில் சேர்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக கட்டடங்களில் மேல் தளத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். மொட்டை மாடிக்கான கட்டுமான பணியின் போதே, தண்ணீர் வெளியேறுவதற்கான வாட்டம் முறையாக இருக்க வேண்டும்.
இத்துடன் மொட்டை மாடியில் சேரும் தண்ணீர் எவ்வித தடையும் இன்றி உடனுக்குடன் வெளியேற வழிசெய்ய வேண்டும். இதற்கான குழாய்கள் இணையும் இடங்களில் உடைப்பு உள்ளிப்ப பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். மொட்டை மாடியில் இருந்து வெளியேற்றப்படும் மழை நீர், நிலத்தில் இறங்க முறையான மழை நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட வேண்டும். இந்த நீர் உறிஞ்சு குழாய்கள் சாதாரணமாக, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
இதே போன்று நீர் உறிஞ்சு குழிகளில் இருந்து தண்ணீர் நிலத்தில் இறங்கும் வசதி அல்லது கிணற்றில் இறங்கும் வசதி ஆகியவற்றிலும் முறையான பராமரிப்பு அவசியம். இத்துடன் உங்கள் வீட்டை சுற்றி மழைக்காலத்தில் அதிக நேரம் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். சாலையில் உள்ள மழை நீர் வடிகால்களுக்கு உரிய இணைப்பை ஏற்படுத்தி , வீட்டில் இருந்து உபரி மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.





















