Purisai Kannappa sambandan: வென்ற தெருக்கூத்து கலைஞர்கள்.. கிடைத்த பத்மஸ்ரீ! யார் இந்த புரிசை கண்ணப்ப சம்பந்தன் ?
Terukkuttu Purisai Kannappa sambandan: "தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன்னுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது "

Purisai Kannappa sambandan: இயல், இசை, நாடகம் மூன்றும் இணைந்த ஒரு தொன்மையான கலை தெருக்கூத்து. மனிதன் கதை சொல்ல ஆரம்பித்த காலத்திலேயே உருவாக்கப்பட்ட ஆதி கலை தெருக்கூத்து கலை. குறிப்பாக வட தமிழ்நாட்டில் தெருக்கூத்து என்பது மக்களின் வாழ்வியலின், அங்கமாக இருந்து வருகிறது. தற்போது அழிந்து வரும் கலைகளின் ஒன்றாக தெருக்கூத்து இருந்து வருகிறது.
புரிசை தெருக்கூத்து பயிற்சி பள்ளி - Purisai
இன்றும் வடதமிழ்நாட்டில் மகாபாரதம் கதைகளை மையமாக வைத்து தெருக்கூத்துகள் நடைபெற்று வருகிறது. அழிந்து வரும் இந்த தெருக்கூத்து கலையை ஒரு சிலர், இன்றும் காப்பாற்றி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள மிகச் சிறிய கிராமம் "புரிசை" தெருக்கூத்து கலைஞர்களுக்கு புகழ் பெற்ற கிராமமாக இருந்து வருகிறது.
தொடர்ந்து "தெருக்கூத்து பயிற்சி பள்ளி" மூலம் தெருக்கூத்து கலைஞர்களை உருவாக்கி வருகிறது. அக்கிராமத்தை சேர்ந்த புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் மன்றத்தின் தலைவராக உள்ள கலைமாமணி, புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.
யார் இந்த புரிசை கண்ணப்ப சம்பந்தன் ? -Terukkuttu Purisai Kannappa Sampanthan
"புரிசையார்" கூத்து என்றால் தெருக்கூத்து பற்றி தெரிந்தவர்கள் அனைவரும் ஆர்வமடைந்து விடுவார்கள். பரம்பரை பரம்பரையாக தெருக்கூத்தை வளர்த்து, வரும் புரிசை கிராமத்தை சேர்ந்த, புரிசைக் கண்ணப்பா சம்பந்தன் அவர்களுக்கு தான் தற்போது பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. இவரது தந்தை கண்ணப்ப தம்பிரான்.
தெருக்கூத்து கலைஞரான, இவர் பயிற்சி பள்ளியை அமைத்து ஆர்வமுள்ளவர்களுக்கு தெருக்கூத்து பயிற்சி வழங்கி வருகிறார். வகுப்புகளும் முறைப்படுத்தப்பட்டு, வார இறுதி நாட்களில் 15 வாரங்களுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன. அழிந்து வரும் கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் உன்னத பணியை மேற்கொண்டு வருகிறார்.
வெளிநாடுகளில்..
தெருக்கூத்து என்றால் மகாபாரதம் கதை கண்டிப்பாக இடம் பெற்றுவிடும். அதேபோன்று ராமாயணம், பாரதியின் பாஞ்சாலி சபதம் போன்ற தெருக்கூத்து கதைகளையும் கருவாக வைத்து கதைகள் சொல்லித் தரப்படுகின்றன. பல்வேறு நாடுகளுக்கு சென்றும் அங்கும் தெருக்கூத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்று இருக்கின்றனர். சிங்கப்பூரிலும் தெருக்கூத்து பயிற்சியை அளித்துள்ளார்.
150 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் கலைச் சேவை
துரைசாமி தம்பிரான், ராகவ தம்பிரான், நடேசன் தம்பிரான், கண்ணப்ப தம்பிரானுக்கு அடுத்து தற்போது சம்பந்தன் தம்பிரான், கிட்டத்தட்ட 150 வருடங்களாக தெருக்கூத்து கலையை பாதுகாத்து வருகின்றனர். பொதுவாக தெருக்கூத்து என்பது புராணங்களை அடிப்படையாகக் கொண்டு நாடகங்கள் நடத்தப்படும். ஆனால் இவர்கள் குழுவினரோ, புராணங்களை கடந்தும் பல்வேறு தெருக்கூத்து நாடகங்களை நடத்தியுள்ளனர். கார்சியா மார்க்கஸின் "A very oldman with enormous wings" என்ற சிறுகதையையும் கூட தெருக்கூத்தாக்கி அசத்தியிருக்கிறார்கள்.
தெருக்கூத்தை பொறுத்தவரை பெண் வேடத்தை ஆண்களை அணிந்து நடிப்பது வழக்கம், அதையும் புரிசை தெருக்கூத்து கலைஞர்கள் மாற்றி இருக்கிறார்கள். பெண்களையும் தெருக்கூத்து கலையில் இணைத்த சாதனை புரிசை கூத்து கலைஞர்களே சாரும். புரிசை கண்ணப்ப சம்பந்தன்னுக்கு கிடைத்திருக்கும் பத்மஸ்ரீ விருது என்பது ஒவ்வொரு தெருக்கூத்து கலைஞருக்கும் கிடைத்திருக்கும் மாபெரும் அங்கீகாரம் என்பதில் மாற்று கருத்து இல்லை.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

