![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mothers Day 2022: ஒவ்வொருவராலும் கொண்டாடப்பட வேண்டிய உன்னதம்: தாய்மார்களின் பிரச்சினைகளும்... தீர்வுகளும்..!
35 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் 1 ஆண்டு வரை காத்திருக்கலாம். குறிப்பிட்ட நாட்களில் என்றில்லாமல், மாதவிடாய் நின்ற பிறகு உறவு கொள்ளலாம்.
![Mothers Day 2022: ஒவ்வொருவராலும் கொண்டாடப்பட வேண்டிய உன்னதம்: தாய்மார்களின் பிரச்சினைகளும்... தீர்வுகளும்..! Mothers Day 2022: Pregnancy, Pre - Pregnancy, post - Pregnancy Experts Answer All you should know Mothers Day 2022: ஒவ்வொருவராலும் கொண்டாடப்பட வேண்டிய உன்னதம்: தாய்மார்களின் பிரச்சினைகளும்... தீர்வுகளும்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/08/48fa8157529494c1531dd99068523c05_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்த உலகிலேயே ஈடு இணையற்ற, எதையும் எதிர்பார்க்காத ஒன்று அம்மாவின் அன்பு. நாம் அனைவரும் இந்த புவியில் ஜனித்திருக்கக் காரணம் தாய்.
தாயைச் சிறப்பிக்கும் விதமாக இன்று (மே 8) உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஏபிபி நாடும், ஜெம் மருத்துவமனையும் இணைந்து அன்னையர் தின சிறப்பு நிகழ்வை நடத்தினர்.
இதில் ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்துகொண்டு, கருவுறுதல், தாய்மை, மகப்பேறுக்குப் பிறகான ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். குழந்தையின்மை சிகிச்சை நிபுணரும் மருத்துவருமான அனுஷா, லேப்ராஸ்கோப்பி சிகிச்சை நிபுணரும் மருத்துவருமான கார்த்திகா, பெண்கள் புற்றுநோய் சிகிச்சை நிபுணரும் மருத்துவருமான டெல்ஃபின் சுப்ரியா உள்ளிட்டோர் இந்த கேள்வி - பதில் நிகழ்வில் பங்கேற்றனர்.
இளம்பெண்கள் மத்தியில் பிசிஓடி சாதாரணமாக மாறிவிட்டது. இதற்கு என்ன காரணம், எப்படித் தடுப்பது?
துரித உணவுகளை எடுத்துக்கொள்வது, சாப்பிடாமலேயே இருப்பது, மரபுவழியாக வருவது, மன அழுத்தத்தால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் என பிசிஓடிக்கு நிறையக் காரணங்கள் உள்ளன. பிரச்சினையைக் கண்டுபிடித்த உடனேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்யலாம்.
பிசிஓடிக்குக் கட்டாயம் மருந்து எடுக்க வேண்டும் என்றில்லை. தைராய்டு மாத்திரை போட்டாலேயே சிலருக்கு பிசிஓடி சரியாகும். பிசிஓடி இருப்பதாலேயே கருத்தரிக்க முடியாது என்றில்லை. தனிநபர்களைப் பொருத்து இவை மாறும்.
திருமணமான தம்பதிகள் எவ்வளவு நாட்கள் வரை இயல்பான கருத்தரிப்புக்குக் காத்திருக்கலாம்?
35 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் 1 ஆண்டு வரை காத்திருக்கலாம். குறிப்பிட்ட நாட்களில் என்றில்லாமல், மாதவிடாய் நின்ற பிறகு உறவுகொள்ளலாம். பிறகும் கருத்தரிக்கவில்லை என்றால், மருத்துவரைச் சந்திக்கலாம். 35 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 மாதம் வரை இருந்துவிட்டு, மருத்துவரைப் பார்க்கலாம். 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள், திருமணமானதும் மருத்துவரைப் பார்த்து சோதித்துக்கொள்ளலாம். இந்தக் காத்திருப்பில் வயது ஒரு முக்கியக் காரணி.
கருத்தரிப்பு பரிசோதனை உபகரணங்களில் 2 பிங்க் கோடுகளைப் பார்த்ததும் ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்?
அன்றே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஃபோலிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அடுத்த 2 வாரங்களில் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். கரு எங்கே தங்கியுள்ளது என்பதைப் பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.
குங்குமப்பூ சாப்பிட்டால், பீட்ரூட் சாறு அருந்தினால் குழந்தை கலராகப் பிறக்கும் என்பதில் உண்மை உள்ளதா?
அறிவியல்பூர்வமாக அதில் எந்த உண்மையும் இல்லை. மரபுரீதியாக வழிவழியாக வரும் இயல்புகளே குழந்தைக்கு இருக்கும். இத்தகைய உணவுகளின்மூலம் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது.
அதிக காரமான, குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடலாமா?
சாப்பிடக்கூடாது என்று எதுவுமில்லை. அதே நேரத்தில் குளிர்ச்சியானதைச் சாப்பிட்டால் சளி பிடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல வயிறு பெரிதாகத் தொடங்கும்போது இயல்பாகவே நெஞ்சரிச்சல் ஏற்படும். அவற்றைத் தடுக்கக் காரமான உணவுகளைத் தடுப்பது நல்லது.
குழந்தை தாய் என 2 பேருக்குச் சாப்பிட வேண்டும் என்பதில் உண்மையில்லை. சத்தான, ஒரு நபருக்குத் தேவையான உணவு போதுமானது. புரதச்சத்து மிகுந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை குறைவாக எடுத்துக்கொண்டால் போதும்.
சுகப்பிரசவத்துக்கு என்ன செய்ய வேண்டும்?
அதிக எடை போடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மொத்தமாகவே 10 முதல் 12 கிலோ எடைதான் அதிகரிக்க வேண்டும். யோகா, உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.
சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகமாகிவிட்டதாக தெரிகிறதே? உண்மையா?
அதில் நாம் பார்க்க வேண்டியது முன்பு இருந்த தாய், சேய் இறப்பு விகிதம் தற்போது குறைந்துள்ளது. முன்பெல்லாம் பெண்கள் அதிகமாக வேலை செய்வார்கள். அதற்கு ஏற்றார்போல அவர்களின் உடல்வாகு அமையும். ஆனால் தற்போது அனைத்தையும் எளிதாக்கிவிட்டார்கள். அதனால் வேலைப்பளு குறைந்துள்ளது. இதனால் அவர்களுக்கு சிசேரியன் ஒரு ஆப்ஷனாக மாறிவிடுகிறது.
தற்போது உள்ள பெண்கள் பெரும்பாலானோர் வலி தாங்க முடியாது என்பதலேயே சிசேரியனை ஆப்ஷனாக தேர்தெடுக்கிறார்கள். அவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தாய்ப்பால் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?, என்ன மாதிரியான உணவுகள்? தண்ணீர் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?
குழந்தை பிறந்தபிறகு முதல் சில நாட்களுக்கு கொலஸ்ட்ரம் எனப்படும் இளம் மஞ்சள் நிற திரவம் வரும். அதைக் கண்டிப்பாக குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். அதைத்தொடர்ந்து தாயிடம் குழந்தையைத் தாய்ப்பால் குடிக்க முயற்சிக்க வேண்டும். குழந்தை சப்பச் சப்பத்தான் ப்ரொலாக்டின் என்னும் ஹார்மோன் சுரக்கும், அதற்குப் பிறகு தாய்ப்பால் சுரக்க ஆரம்பிக்கும்.
அதற்கடுத்து நீர்ச் சத்து ஒரு தாய்க்கு முக்கியம். பிரசவத்துக்குப் பிறகு லேசான நீரிழப்பு ஏற்படும். அதனால் தாய் போதுமான அளவு தண்ணீர், பால், பழங்கள் எனப் போதுமான அளவு நீர்ச் சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
**
கர்ப்ப காலத்தில் தம்பதிகள் ஒன்றுசேரலாமா?
இப்போது அதிகம் கேட்கும் வார்த்தை Postpartum Depression. பிரசவத்துக்கு பிறகான இந்த உளவியல் சிக்கலை எப்படிக் கையாள வேண்டும்?
குழந்தை பிறப்புக்கு பிறகு தொப்பை/ தழும்பு வராமல் தடுப்பது எப்படி?
ஃபால்ஸ் பெயின் என்பதை எப்படி அறிந்துகொள்ள வேண்டும்?
குழந்தை பிறந்த பிறகு தாய்க்குக் குறைந்தபட்சம் எவ்வளவு நேரத் தூக்கம் அவசியம்?
கரு உறுதியான உடன் வெயிட் தூக்கக் கூடாதா? என்ன மாதிரியான யோகா, உடற்பயிற்சிகளைச் செய்யலாம்?
என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவர்கள் பதிலளித்ததைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)