(Source: ECI | ABP NEWS)
எத்தனை தடைகள் வந்தாலும் , தமிழ்நாட்டில் இது நடக்கும் - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
எத்தனை தடைகள் வந்தாலும் , தமிழ்நாட்டை செமி கன்டக்டரின் தலைநகரமாக முதலமைச்சர் மாற்றுவார் - தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா

சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் ;
தமிழகத்தில் இருக்கும் தொழிற் சூழல் மற்றும் தொழிலாளர்கள் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி தடை இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் சிலர் சாம்சங் நிறுவனம் பிற மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக பல புரளிகளை கிளப்பினார்கள். ஆனால் அவர்கள் மேலும் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாட்டில் செய்யப் போகிறார்கள். மேலும் 100 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகப்படுத்த உள்ளனர்.
படித்த இளைஞர்கள் கிடைக்க சிரமம்
மிக முக்கியமான முடிவை ஒன்றை எடுத்து இருக்கிறோம் செமி கன்டக்டர் துறையில் திறமை மொத்தமும் தமிழ்நாட்டில் உள்ளது. படித்த இளைஞர்கள் கிடைப்பது மற்ற இடங்களில் மிகவும் சிரமம் , ஆனால் தமிழ்நாட்டில் அந்த நிலை இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டை செமி கண்டக்டரின் தலைநகரமாக முதலமைச்சர் மாற்றுவார்.
இந்திய அளவில் செமி கன்டக்டர் துறையில் உற்பத்தி மற்றும் இறக்குமதி ஏற்றுமதியில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. செமி கன்டக்டர் டிசைனிங் தொடர்பாக புதிய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வர உள்ளது. மேலும் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் தொழில் வளர்ச்சி மேம்படுத்தி உள்ளோம்.
தோல் அல்லாத காலனி துறையில் தைவாண்ய நிறுவனம் ஜப்பானிய நிறுவனம் கொரியன் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வரவுள்ளது. 1973 - 2021 வரை 24 சிப்காட் மட்டுமே உருவாக்கப்பட்டது. ஆனால் திராவிட முதல்வர் ஆட்சியில் , 9 புதிய மாவட்டங்களில் 30 சிப்காட் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்களில் சிப்காட் தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த திராவிட மாடலின் முதல்வர் செயல்பட்டு வருகிறார். ஒரு சில அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே நஞ்சை நிலங்களை சிப்காட்டுக்காக கையகப்படுகிறது.
ஒரு பகுதிக்கு முதலீடு கொண்டு சேர்த்தால் , அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யும் பணியில் முதல்வர் முதலமைச்சர் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர் , பாதுகாப்பும் , திறமைசாலிகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் தான் தொழில் நிறுவனங்கள் இங்கு அதிக முதலீடு செய்கிறார்கள் எனவும் தமிழகத்தில் படித்தால் போதும் நிச்சயமாக வேலை வாய்ப்பு உண்டு எனவும் எந்தெந்த படிப்புகளுக்கு என்னென்ன வேலை வாய்ப்பு உள்ளதோ அதற்கேற்ற முதலீட்டை திராவிட மாடல் முதலமைச்சர் கொண்டு வருவார்.
முதலமைச்சரின் ட்ரிலியன் மாடல் கனவு
தமிழகத்தின் 9.69% பொருளாதார வளர்ச்சி மூலம் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது எனவும் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாடு சரியான வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் முதலீட்டு சுழல் என்பது பாதுகாப்பாகவும் , மிகச் சிறப்பாக இருப்பதாகவும் , மிகுந்த திறமையானவர்கள் உள்ள மாநிலமாகவும் தொடர்ந்து உலகத்தில் என்ன மாற்றங்கள் நடந்தாலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் எனவும் முதலமைச்சரின் ட்ரில்லியன் டாலர் கனவு நிச்சயமாக நிறைவேறும்.
10 லட்சத்து 24 ஆயிரம் கோடியில் 32 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது.தொழில் வளர்ச்சி 72% வளர்ச்சியை எட்டி இருக்கிறோம். மேலும் எதிர்காலத்தில் அது வளர கூடும் ,தமிழ்நாடு உடன் எந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டாலும் அது நிச்சயமாக நடக்கும். ஏற்கனவே நிறுவனங்களுடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவகிறது” எனத் தெரிவித்தார்.




















