பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
அசோக் சார் என்னிடம் வித்யாசமாக நடப்பார். எப்போதும் என் பின்னாடியே வருவார். தனது மார்பை சுட்டிக்காட்டி தவறாக தொடுவார் என அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கல்லூரி பேராசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த மாணவி உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த அந்த மாணவி தர்மசாலாவில் உள்ள அரசு பட்டப்படிப்பு கல்லூரியில் படித்து வந்தார். அப்பெண் டிசம்பர் 26 அன்று லூதியானாவில் உள்ள தயானந்த் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக சேர்ந்தார். அப்போது அவர் வாக்குமூலம் அளிக்கும் வீடியோதான் இப்போது வெளியாகியுள்ளது.
அந்த பெண் 2025, செப்டம்பர் 18ம் தேதி ஹர்ஷிதா, ஆக்ரிதி மற்றும் கோமோலிகா ஆகிய மூன்று மாணவிகளால் தாக்கப்பட்டுள்ளார். அதனைப் பற்றி வெளியில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து கல்லூரியின் பேராசிரியர் அசோக் குமார் என்பவர் அப்பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டதும் தெரிய வந்தது.
தனது மகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது மற்றும் அவள் இறந்த அதிர்ச்சி காரணமாக முன்கூட்டியே போலீசாருக்கு தன்னால் தகவல் தெரிவிக்க முடியவில்லை என்று அப்பெண்ணின் தந்தை தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவையும் சமர்பித்துள்ளார். மேலும் அந்த புகாரில் தனது மகள் கடுமையான மன அழுத்தத்திற்கும் பயத்திற்கும் ஆளானதாகவும், இதனால் அவரது உடல்நிலை விரைவாக மோசமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அந்த பெண் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை படுக்கையில் உயிருக்கு போராடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அப்போது ஒரு பெண்மணி வீடியோ எடுக்கிறார். அதில், அசோக் சார் என்னிடம் வித்யாசமாக நடப்பார். எப்போதும் என் பின்னாடியே வருவார். தனது மார்பை சுட்டிக்காட்டி தவறாக தொடுவார். பாலியல் தொல்லை கொடுப்பார்” எனவும் கூறியுள்ளார்.
அதனடிப்படையில் 2026, ஜனவரி 1ம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார், மூன்று மாணவிகள் மீது ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அந்த பேராசிரியர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கல்லூரி முதல்வர் ராகேஷ் பதானியா, கல்லூரி நிர்வாகத்திடம் அந்த மாணவி எந்த புகாரும் அளிக்கவில்லை என கூறியுள்ளார். எனினும் ராகிங் செய்த விஷயத்தில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது. இந்த விஷயத்தில் நாங்கள் காவல்துறையுடன் ஒத்துழைக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.
அதேபோல் காங்க்ரா காவல் கண்காணிப்பாளர் அசோக் ரத்தன் கூறுகையில், அனைத்து குற்றச்சாட்டுகளும் முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ பதிவுகள், வீடியோ ஆதாரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் வாக்குமூலங்கள் அனைத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவி இறப்பதற்கு முன்பு பதிவு செய்ததாகக் கூறப்படும் வீடியோ இந்த வழக்கில் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















