2026 சட்ட மன்ற தேர்தல் ; மேயர் பிரியாவின் MLA ஆசை !! ஓட்டு சேகரிப்பு பணிகள் துவக்கம் ?
சென்னையில் 10 க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் , தங்களுக்கும் எம்.எல்.ஏ சீட் வேண்டும் என தங்களின் ஆசையை வெளிபடுத்தி உள்ளனர்.

நானா - நீயா போட்டியில் உட்கட்சி நிர்வாகிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளை கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகிகள் எடுத்து வருகின்றனர். கட்சியின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நிர்வாகிகள் ஆர்வம் காண்பித்து வருவதால் , நானா , நீயா என்ன போட்டி நிலவுகிறது. உட்கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி இதற்கான முடிவுகளை விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தோர் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். இதற்கிடையே கடந்த தேர்தல்களில் எம்.எல்.ஏ. வேட்பாளர்களாக நின்று தோற்றவர்கள் பலர் , கவுன்சிலர்களாக உள்ளனர். வரும் தேர்தல்களில் அவர்கள் எம்.எல்.ஏ.,வுக்கு போட்டியிட தயாராகி வருகின்றனர்.
" கவுன்சிலர்களின் எம்.எல்.ஏ ஆசை "
தி.மு.க வை பொறுத்தவரை, வடக்கு சென்னையில் அமைச்சர் சேகர்பாபு, தென் சென்னையில் சுப்பிரமணியன் ஆகியோர் செல்வாக்கு படைத்தவர்களாக உள்ளனர். இதனால் இவர்கள் இருவரிடமும் அந்தந்த பகுதி கவுன்சிலர்கள், தங்களின் எம்.எல்.ஏ., ஆசை குறித்த விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும் விருப்பமான இரண்டு தொகுதிகள் பட்டியலையும் அளித்துள்ளனர். எம்.எல்.ஏ., வேட்பாளர் சீட்டு வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளதால் அமைச்சர்கள் வீடுகளில் தினமும் சென்று, கவுன்சிலர்கள் தவம் கிடக்கின்றனர். அதே போல் அ.தி.மு.க., கவுன்சிலர்களும் எம்.எல்.ஏ.,வுக்கு போட்டியிட, அவர்களின் மாவட்ட செயலர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது ;
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரு.வி.க., நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து , அத்தொகுதியில் ஓட்டு சேகரிப்பு பணியை தற்போதே துவக்கி இருக்கிறார்.
துணை மேயர் மகேஷ்குமார், வேளச்சேரி மற்றும் சைதாப்பேட்டை ஆகிய இரண்டில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், 10 - க்கும் மேற்பட்ட தி.மு.க., கவுன்சிலர்கள், தங்களுக்கும் எம்.எல்.ஏ., சீட் வேண்டும் என அமைச்சர்கள் வீடுகளில் தவம் கிடக்கின்றனர். இவர்களில் குறைந்தது, ஐந்து பேருக்கு எம்.எல்.ஏ.,வுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் கூறினர்.























