Driverless Metro Rail: அடி தூள்.. ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள்; தயாரிப்பு ஒப்பந்தம் போட்ட CMRL
சென்னை மேட்ரோ ரயில் நிறுவனம், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிக்க, சுமார் ரூ.1,538 கோடியில் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ரயில்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும் தெரியுமா.?

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்காக 1,538.35 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ரயில்களின் தயாரிப்பு எப்போது முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்த விவரங்களை தற்போது காணலாம்.
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தில், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரயில் பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக, Alstom Transport India நிறுவனத்துடன், 1,538.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான ஏற்புக் கடிதம், கடந்த ஏப்ரல் 28-ம் தேதியன்று Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில், அதன் இயக்குநர் மனோஜ் கோயல்(அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் Alstom Transport India நிறுவனத்தின் இயக்குநர் பராக் நந்தலால் கோஹெல் ஆகியோர் இந்த ரயில்களின் தயாரிப்பிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன்(மெட்ரோ இரயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணை பொது மேலாளர் பி. தியாகராஜன், பொது ஆலோசகர் AEON மற்றும் Alstom Transport India நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.
ஒப்பந்தத்தில் என்னென்ன விஷயங்கள் அடங்கும்.?
இந்த ஒப்பந்தத்தில், ரயில்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு ஆகியவை அடங்கிய ஒட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.
ஓட்டுநர் இல்லா ரயிலின் சேவை எப்போது தொடங்கும்.?
இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில், வரும் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து, 14 மாதங்களுக்கு கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாமல் ரயிலை இயக்குவதற்கான சோதனைகள் நடத்தப்படும். இந்த சோதனையில், பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் சேவை சோதனைகளும் அடங்கும். இந்த சோதனைகள் முடிந்த பின்னர், மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும், 2027 செப்டம்பர் முதல் 2028 மே மாதம் வரை, ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், 2-ம் கட்ட திட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்வதற்கான 3-வது மற்றும் இறுதி ஒப்பந்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு ஒப்பந்தங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், வரும் 2028-ம் ஆண்டின் இறுதியில், ஓட்டுநர் இல்லா ரயிலின் சேவை தொடங்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.





















