" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மனைவி தாய் வீடு சென்ற நேரத்தில் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் அசிங்கம்... ரூ.5 லட்சம் கேட்டு வழக்கறிஞர் போட்ட 'ஸ்கெட்ச்' - சூளைமேடில் பரபரப்பு

" உன்னை எனக்கு பிடிக்கும் - திருமணம் செய்து கொள்ளலாம் "
சென்னை சூளைமேடு பத்மநாப நகர் தயாளு அம்மாள் தெருவில் அடுக்குமாடி வீட்டில் வசித்து வருபவர் சுதர்சன் ( வயது 30) இவர் பட்டப் படிப்பு படித்து விட்டு மெடிக்கல் ரெப்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை இறந்து விட்ட நிலையில் அவரது தாயார் சரஸ்வதி மற்றும் அண்ணனுடன் சேர்ந்து வசித்து வருகிறார். சுதர்சனத்திற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கிருஷ்ணவேணி என்பருடன் திருமணமாகியுள்ளது. இதனால், ஆடி மாதத்திற்காக அவரது தாய் வீட்டிற்கு மனைவியை அழைத்துச் சென்று சென்றுள்ளனர்.
இந்நிலையில், சுதர்சனம் நள்ளிரவில் தனது வீட்டின் கீழ் வீட்டில் உள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த நமீதா (வயது 21) என்ற பெண்ணிடம் , உன்னை நான் நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறேன். உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தைக் கூறியுள்ளார். இதனை நமீதா தனது கைபேசியில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து வைத்துள்ளார்.
" இனிமேல் இது போல் நடக்க மாட்டேன் "
பின்னர் , சுதர்சனிடம் நமிதா அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து சென்று தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மிரட்டலாக கூறியுள்ளார். இதனால் அதிர்ந்து போன சுதர்சன் "இதுபோன்று இனிமேல் நடக்க மாட்டேன்" என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதன் பின், மறுநாள் சுதர்சனுக்கு வாட்ஸ் ஆப்பில் 'அல்ட்ரா அமர் அவென்யூ' பகுதிக்கு வர வரவேண்டும் என நமீதா குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளார். இந்த குறுஞ் செய்தியை படித்த சுதர்சன் ஆசையுடன் அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் மற்றும் அவருடன் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் உடன் இருந்துள்ளனர். இவர்கள் உடனடியாக சுதர்சனை வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று நடந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ளனர். மேலும், நமிதாவிற்கு நஷ்ட ஈடாக 5 லட்சம் பணம் தர வேண்டும் எனவும் , "தர மறுத்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்து சிறையில் அடைத்து விடுவேன் என மிரட்டி உள்ளனர்.
" பணம் கேட்டு மிரட்டிய வழக்கறிஞர்கள் "
தன்னிடம் பணம் இல்லை என சுதர்சன் கூறிய நிலையில், இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன், யோசித்து முடிவு செய் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர். இரண்டு நாள் அவகாசம் முடிந்து மீண்டும் சுதர்சனத்தை வீட்டிற்கு அழைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவரோ, தன்னிடம் பணம் இல்லை என சொன்னதும் அவரை தாக்கியும் , இடது காலில் சிகரெட்டால் சூடு வைத்து கொடுமையும் செய்துள்ளனர்.
மேலும் 2 லட்சம் பணத்தையாவது கொடுக்க வேண்டும் என சுதர்சனை மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்த சுதர்சனம் அவரது மனைவியிடம் நடந்த சம்பவத்தைப் பற்றி கூறி , மனைவியின் ஒப்புதலோடு இந்த விவகாரம் குறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட சூளைமேடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் , இது குறித்து வழக்கு பதிவு செய்து சூளைமேடு பகுதியை சேர்ந்த உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் மோனிஷா (வயது 26) கேரள மாநிலத்தை சேர்ந்த சிவரஞ்சனி (வயது21) நமீதா (வயது21) மற்றும் சூளைமேடு தமிழர் வீதியை சேர்ந்த போட்டோகிராபர் பாலகிருஷ்ணன் (வயது 30) சூளைமேடு ஔவை நகர் பகுதியில் சேர்ந்த உணவு டெலிவரி வேலை செய்யும் கணேஷ் (வயது 26) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மேலும், சுதர்சனை பணம் கேட்டு மிரட்டியதும் பிளாஸ்டிக் பைப் மற்றும் கையால் அடித்து துன்புறுத்தியது சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதும் விசாரணையில் உண்மை என தெரிய வந்துள்ளது.
பின்னர் இவர்கள் ஐந்து பேரின் மீது வழக்குப் பதிவு செய்த சூளைமேடு காவல் ஆய்வாளர் மணி நகுலன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















