Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், முக்கிய வழித் தடங்களில் கட் சர்வீஸ் பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகம் இயக்க துவங்கியுள்ளது.

3,700 பேருந்து - 34 லட்சம் பேர் பயணம்
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்போது 700 - க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், தினமும் 3,700 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக, தினமும் 34 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே பிராட்வேயில் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், பிராட்வேயில் இருந்து இயக்கப்பட்ட மாநகர பேருந்துகள், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் அமைக்கப்பட்ட புதிய தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பிரித்து இயக்கப்படுகின்றன.
இதனால் அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, மாநகர பேருந்துகள் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. சில நேரங்களில், ஒரே வழித்தடத்தில், வரிசையாக மூன்று பேருந்துகள் வருகின்றன. எனவே, குறுகிய துாரத்தில் பயணியர் வசதியாக, தேவைக்கு ஏற்ப கட் சர்வீஸ் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது ;
பிராட்வே பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால் தவிர்க்க முடியாத நிலையில், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் இருந்து பேருந்துகள் இயக்கி வருகிறோம். இது தவிர, சாலைகள், மேம்பால பணிகளும் நடப்பதால், அலுவலக நேரங்களில் ஏற்படும் கடும் நெரிசலில், பேருந்துகளை சீராக இயக்குவதில் நடைமுறை சிக்கல் இருந்து வருகிறது.
'கட் சர்வீஸ்' இயக்குவது வழக்கமான ஒன்று தான். ஆனால், வழக்கமான பேருந்துகளின் இயக்கத்தில், எந்த மாற்றமும் செய்யவில்லை. தற்போது பயணியர் தேவையை கருத்தில் கொண்டு, முக்கிய வழித் தடங்களில் கூடுதலாக 'கட்' சர்வீஸ்'கள் இயக்குகிறோம்.
'18ஏ' வழித்தட பேருந்துகள் தாம்பரம், பல்லாவரம், ஆலந்துார் வரையிலும், '23சி' வழித்தட பேருந்துகள் டி.எம்.எஸ், சைதாப்பேட்டை வரையிலும் இயக்கப்படுகின்றன. அதே போல், '21ஜி' வழித்தட பேருந்துகள் கிண்டி, மந்தவெளி, '54' வழித்தட பேருந்துகள் சைதாப்பேட்டை, போரூர் உட்பட பல்வேறு வழித்தடங்களில், இந்த மாற்றங்களை செய்துள்ளோம். பயணியர் தேவை இல்லாத நேரத்தில், இந்த சர்வீஸ் இயக்கப்படாது என இவ்வாறு அவர்கள் கூறினர்.























