வேலை தேடுபவர்களா நீங்கள்..? இதோ 35 ஆயிரம் பணியிடங்கள்...! முழு விபரம் உள்ளே...
தனியார் துறையில் உள்ள 35 ஆயிரம் வேலைவாய்ப்புகளை வேலையற்ற மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தனியார் துறையில் வேலைக்கு பதிவு செய்யும் வகையில் சிறப்பு முகாம் 11.03.2025 நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 500 -க்கு மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் 'பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப்" திட்டத்தின் கீழ் 'Pilot Project" திட்டத்தின் வாயிலாக 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமா, பாலிடெக்னிக் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு ஓராண்டு கால தொழிற்பயிற்சி வழங்கி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. ஓராண்டு ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி வழங்கி, நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியின் போது ஊக்கத்தொகை
இத்திட்டத்தின் கீழ் ஓராண்டுக் கால நிறுவன பயிற்சியும், பயிற்சியின் போது பயிற்சி பெறும் வேலை நாடுநர்களுக்கு மாதம் 5000 ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பயிற்சி காலத்திற்கு ஒருமுறை உதவித்தொகையாக 6000 ரூபாய் வழங்கப்படும். இதற்கான வயது வரம்பு 21 முதல் 24 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க முடியாதவர்கள்
விண்ணப்பதாரரோ, விண்ணப்பதாரரின் பெற்றோரோ, விண்ணப்பதாரரின் கணவன் அல்லது மனைவியோ மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் பணிபுரிபவராக இருத்தல் கூடாது. மேலும் முழு நேர பணியாளர்கள் மற்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள், NAPS மற்றும் NATS திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி பெற்றவர்கள், மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் ஏதோனும் ஒரு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலாது.
35 ஆயிரம் பணியிடங்கள்
மேலும் இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ள அதில் தனியார்துறையில் வேலை தேடும் இளைஞர்கள் பதிவு செய்து, வேலைக்கு www.pminternship.mca.gov.in என்ற இணையதளம் வாயிலாக நேரடியாக விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு முழுவதும் அந்த இணையதளத்தில் 35,000 -க்கு மேற்பட்ட காலிப் பணியிட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம்
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாகத் தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளம் http://www.tnprivatejobs.tn.gov.in/உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் தமிழ்நாட்டில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் உட்பட மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பெருவாரியான தனியார் துறை நிறுவனங்கள் பதிவு செய்துள்ளனர்.
இணைய வழியாக நேர்காணல்
தனியார் துறை நிறுவனங்களில் வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு, தனியார்த் துறை நிறுவனங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு நேரடியாக இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் பட்சத்தில் வேலையளிக்கும் நிறுவனங்கள் வாயிலாக இணைய வழியாக நேர்காணல் நடத்தப்பட்டு பணியில் சேருவதற்கு பணி ஆணையும் வழங்கப்படும்.
பதிவு செய்யும் முறை
மேற்கண்ட இணையதளத்தில் முழுமையாக பதிவு செய்து முடித்த பின் தங்களுக்கென்று ஒரு DASHBOARD உருவாகி இருக்கும். அதில் JOB SEARCH என்ற OPTION ஐ CLICK செய்தால் மாவட்டம், கல்வி தகுதி, முன் அனுபவம் வயது போன்றவை அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ள தனியார் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ள காலியிட அறிவிப்புகள் தோன்றும். அதில் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப APPLY செய்யலாம். மேலும் இது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.
மேலும் விபரம் அறிய
இதற்கு, மயிலாடுதுறை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைப் பதிவு செய்யும் வகையில் செவ்வாய்க்கிழமை மார்ச் 11-ம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மயிலாடுதுறை பாலாஜி நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04364299790/- 9499055904 எண்களை தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

