Jana Nayagan: அடேங்கப்பா.. ஓடிடி-லயே இத்தனை கோடிகளா.? வசூல் வேட்டையை தொடங்கிய ‘ஜன நாயகன்‘...
விஜய் நடிப்பில் உருவாகிவரும் ஜன நாயகன் திரைப்படம், இப்போதே வசூல் வேட்டையை தொடங்கிவிட்டது. படத்தின் ஓடிடி உரிமை ஒரு பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் 69-வது மற்றும் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமைகள் பெரும் தொகைக்கு விற்பனையாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஓடிடி உரிமம் ஒரு பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ரூ.300 கோடியில் உருவாகும் விஜய்யின் ‘ஜன நாயகன்‘
KVN தயாரிப்பு நிறுவனம் சார்பாக 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது விஜய் நடிக்கும் கடைசி படமான ‘ஜன நாயகன்‘. ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், விஜய்யுடன், பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன், இயக்குநர் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், ப்ரியாமணி, ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படம் 2026 ஜனவரி 9-ம் தேதி, அதாவது ரசிகர்களுக்கு பொங்கல் பரிசா வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம், தமிழ் புத்தாண்டில், படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் விநியோக உரிமையை ஏற்கனவே Seven Screens Studio நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளது. படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் ஃபிலிம் நிறுவனம் ரூ.78 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த படத்தின் ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து விநியோக உரிமைகளும் விற்கப்பட்டுவிட்டன.
ரூ.121 கோடிக்கு கைமாறிய ஓடிடி உரிமை
இந்த நிலையில், கடும் போட்டிகளுக்கிடையே, ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை 121 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜன நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, 8 வாரங்கள் கழித்தே ஓடிடி-யில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் என்றால் வசூல் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதிலும், இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்பட்டுள்ளதால், வசூல் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று நம்பலாம். அதற்கு ஏற்றார்போல், படம் வெளியாவதற்கு முன்பே, படத்தின் பட்ஜெட் தொகை வசூலாகிவிட்டது. இனி வருவது எல்லாம் லாபம் தான்.

