![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Vasanthabalan: அநீதி படத்தால் 'இருந்த ஒரு சதவிகித ஈகோவும் காணாமல் போனது...' உருக்கமான போஸ்ட் பகிர்ந்த வசந்தபாலன்!
‘அநீதி’ படத்தின் வெற்றிகரமான 20ஆம் நாளான இன்று உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
![Vasanthabalan: அநீதி படத்தால் 'இருந்த ஒரு சதவிகித ஈகோவும் காணாமல் போனது...' உருக்கமான போஸ்ட் பகிர்ந்த வசந்தபாலன்! Vasanthabalan emotional facebook post after successful 20 days of aneethi movie Vasanthabalan: அநீதி படத்தால் 'இருந்த ஒரு சதவிகித ஈகோவும் காணாமல் போனது...' உருக்கமான போஸ்ட் பகிர்ந்த வசந்தபாலன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/1008ae1187aca98910853c6860e5805d1691575634008224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் மாறுபட்ட இயக்குநர்களில் ஒருவரான வசந்தபாலன் ஆரம்ப காலக்கட்டத்தில் தனது பயணத்தை இயக்குநர் ஷங்கரின் உதவியாளராகத் தொடங்கினார். அவரது ஸ்டைல் என்றுமே வித்தியாசமானது என்பதை அவரின் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களின் மூலம் நிரூபித்தார்.
இப்படி பல காலத்தால் அழியாத படைப்புக்களைக் கொடுத்த வசந்த பாலனின் 'ஜெயில்' திரைப்படம் ஏனோ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் துவண்டு போகாத வசந்த பாலன் முன்னதாக இயக்கி ரிலீசாகியுள்ள திரைப்படம் 'அநீதி'.
கடந்த மார்ச் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் கைதி, மாஸ்டர் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக 'சார்பட்டா பரம்பரை' புகழ் துஷாரா விஜயன் நடித்த நிலையில், இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். வனிதா விஜயகுமார், காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சாரா மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருந்தனர். இயக்குநர் ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில், சக மனிதனை மனிதனாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அநீதி திரைப்படத்தை எடுத்துள்ளார்.
தொழிலாளர்களுக்கான உரிமை, முதலாளிகளின் கோர முகம், கொடுமைகள் போன்ற பல அநீதிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள வசந்தபாலனின் வசனங்கள் படத்தில் அனல் தெரிகின்றன. இப்படம் வெளியாகி 20 நாட்களை வெற்றிகரமாக கடந்து விட்டது. விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இந்த சந்தோஷமான தருணத்தில் இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் மூலம் உருக்கமான பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.
"கடந்த ஜூன் 20ஆம் தேதி முதன்முறையாக தயாரிப்பாளராக இசை வெளியீட்டுக்கு தயாரானேன். முடிந்த அளவு நண்பர்களை, தயாரிப்பாளர்களை, நட்சத்திரங்களை நேரில் சென்று இசை வெளியீட்டுக்கு அழைத்தேன். “எதுக்கு பார்மாலிட்டி? வாட்ஸ்அப்பிலே அழைப்பிதழ் அனுப்பு” பாலன் என்றவர்கள் யாரும் இசை வெளியீட்டு விழாவிற்கு வரவில்லை என்பதையும் கவனித்தேன்.
எந்த விழாவிற்கும் நம் தகுதிக்கு நேரில் சென்று அழைக்க வேண்டிய அவசியம் ஆழமாகப் புரிந்தது. எனினும் இயக்குநர் ஷங்கர் சார், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் பாக்யராஜ் சார், பிரபு சாலமன், அறிவழகன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், எழுத்தாளர் ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், தனஞ்செயன் அவர்கள், கதிரேசன் அவர்கள் என திரையுலக நண்பர்கள் சூழ வெற்றிகரமாக இசை வெளியீடு நடந்தது. உடல் துவண்டிருந்தது.
அடுத்த 15ஆம் நாள் பட வெளியீடு ஆகவே சோர்ந்து போகாமல் மீண்டும் என்னை தயார்படுத்திக் கொண்டு ஓடத் தொடங்கினேன். ஒன்று நன்றாகப் புரிந்தது. உங்களுக்கு ஈகோ என்ற ஒன்று இருந்தால் அது முழுதாக சுக்கல் சுக்கலாக உடைகிற தருணம் நீங்கள் திரைப்படத் தயாரிப்பாளராக மாறுகிற தருணம். ஒரு சதவீதம் இருந்த ஈகோவும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.
பட வெளியீட்டு வேலைகள் ஜரூராய் துவங்கின. புரோமோசன் மற்றும் நேர்காணல்கள் ஹைதராபாத், கோயம்புத்தூர் பயணங்கள் கோவிட் அலை போல நீண்டது. படம் வெளியாவதற்கு முந்தைய நாள் பெரும் பதட்டம் தொத்தியது.
பிரஸ் ஷோவில் கிடைத்த வரவேற்பு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. திரையரங்கில் வெளியான நாளின் மாலைக் காட்சியில் இருந்து திரையரங்குகளில் கூட்டம் வர துவங்கியது. நான் , அர்ஜூன், துஷாரா மூவரும் திரையரங்கு திரையரங்காக செல்லத் துவங்கினோம். ஒரு நாளில் 6 காட்சிகளுக்கு இரவு 3 மணி வரை சென்னை நகரெங்கும் சுற்றினோம்.
அந்த தியேட்டர் ஹவுஸ்புல் சார்... இந்த தியேட்டர் ஹவுஸ்புல் சார்... நைட்ஷோ சிட்டி புல்லா ஹவுஸ்புல் சார் என்ற தகவல்கள் நண்பர்கள் உதவியாளர்கள் வாயிலாக வரத் துவங்கின. பதட்டம் குறைந்து, மகிழ்பதட்டம் உருவானது. மக்களின் ஆதரவை, ரசனையைப் பார்க்க கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் என பெரிய உலா முடிந்து இன்று வெற்றிகரமான 20 வது நாள்.
திரையரங்குகளில் தொடர்ந்து கேட்ட கைதட்டல்கள், கண்ணீர்த் துளிகள் இன்னும் மனதில் நிழலாடுகின்றன. 50 நாட்களாக தூங்காத விழிகள் கெஞ்சுகின்றன இன்றிரவு நன்றாகத் தூங்க வேண்டும்." என உருக்கமான போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)