Vairamuthu: அந்த ஒரு வார்த்தைக்காக 3 நாள் அவதிப்பட்ட வைரமுத்து - அப்படி என்ன நடந்துச்சு?
பம்பாய் படத்தில் இடம்பிடித்த கண்ணாளனே என்ற பாடலின் முதல் வரிக்காக வைரமுத்து 3 நாட்கள் அவதிப்பட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பம்பாய். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றவை. இந்த படத்தில் இடம்பிடித்த கண்ணாளனே பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
கண்ணாளனே பாடலுக்காக சிரமம்:
இந்த பாடல் எப்படி உருவானது என்பதை இந்த பாடலை எழுதிய வைரமுத்து ஒரு நேர்காணலில் விளக்கியிருப்பார். மனிஷா கொய்ராலா - அரவிந்த்சுவாமி நடித்த இந்த பாடலில் மனிஷா கொய்ராலா அரவிந்த் சாமியைப் பார்த்து பாடும் முதல் வரியான கண்ணாளனே என்ற வார்த்தைக்காக வைரமுத்து மிகவும் சிரமப்பபட்டுள்ளார்.
வைரமுத்து தடுமாற்றம்:
இதுதொடர்பாக அவரே கூறியதாவது, பம்பாய் படத்தில் கதாநாயகனைப் பார்த்தவுடன் கதாநாயகியின் மனம் அங்கே சென்றுவிட்டது. தன்னானனே என்று ஆரம்பிக்கிறது பாடல். எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என்று வருகிறது. முதல்ல தன்னானனே என்ற பல்லவிக்கு நான் முதலில் என் தேவனேனு போட்டேன். என் அன்பனே, என் நண்பனே, என் ஜீவனே நாலு போட்ருக்கேன்.
சொல்லிட்டே இருக்கேன். இந்த ஒரு வார்த்தை பல்லவியின் முதல் விழி, அந்த விழி மட்டும் மூன்று நாள் ஆச்சு. இவர் ( ஏ .ஆர்.ரஹ்மான்) என் தேவனே என்றால் பழசு சார்னு சொல்றாரு. என் ஜீவனே என்றால் சொல்லி பழசு ஆகி போச்சு சார். என் தெய்வமேனு சொல்லவானு கேட்டேன். என் அன்பனே, என் அன்பனே என்றால் ஏதோ ஒன்று வேண்டி இருக்கிறது சார். என்னமோ வேண்டி இருக்கிறது. இது என்ன தெரியுமா?
உருவானது எப்படி?
கலை என்ன தெரியுமா? எதையோ ஒன்றை வேண்டும். என்னமோ ஒன்று வேண்டும் என்று தோன்றும். எது என்று யாருக்கும் சொல்லத் தெரியாது. அதுதான் கலை. அந்த கலையை கண்டறிகிறவன் கலைஞன். என்ன ஏதோ இடிக்குது? கடைசியில கோபத்துல வந்ததுதான் எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என்றால் கண்ணாளனே போடுவோமேனு போட்டேன்.
கண்ணாளனே என்ற வார்த்தை வந்தவுடன் அந்த பாட்டு சென்ற உயரத்தில் எங்கள் சண்டை ஏப்ரல் மாத செம்பரம்பாக்கம் மாதிரி ஆவி ஆகிடுச்சு.
இவ்வாறு அவர் பேசினார்.
அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் இந்து - முஸ்லீம் காதலர்கள் தங்கள் திருமணத்திற்காக மேற்கொள்ளும் எதிர்ப்புகள், பின்னர் பம்பாயில் நடக்கும் மதக்கலவரம் அவர்களை எவ்வாறு பாதிக்கிறது? ஆகியவற்றை மிகவும் யதார்த்தமாகவும், உயிர்ப்புடனும் படமாக எடுத்திருப்பார் மணிரத்னம். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.





















