பிரபல இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்.. சினிமாவில் பகுத்தறிவு.. வாழ்நாள் முழுக்க சர்ச்சை
நாளைய மனிதன், காதல் படங்களை இயக்கிய வேலு பிரபாகரன் இன்று காலமானார்.

நாளைய மனிதன், கடவுள் போன்ற படங்களை இயக்கிய வேலு பிரபகாரன் (68). உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் பெரியாரிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் மிகப்பெரிய பங்கு இவருக்கு உண்டு. இவரது படங்கள் காமம், சாதி, மதம் போன்ற பிரச்னைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதால் பரபரப்பை கிளப்பியது மட்டும் இல்லாமல், அவருக்கு தனி அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
காதல் கதை படத்தால் வந்த பிரச்னை
1989ஆம் ஆண்டில் வெளியான நாளைய மனிதன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் வேலு பிரபாகரன். இதைத்தொடர்ந்து சத்யராஜ் நடித்த பிக்பாக்கெட், பிரபு நடித்த உத்தமராசா, மோகன் நடித்த உருவம் போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். பின்னர், அசுரன், கடவுள், புதிய ஆட்சி, புரட்சிக்காரன் போன்ற சமூகம் சார்ந்த கருத்துகள் நிறைந்த படத்தையும் இயக்கி நற்பெயரை எடுத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2009ல் இவரது இயக்கத்தில் வெளியான காதல் கதை திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது. காதல் கதை என்ற பெயரில் மிக மோசமான படம் என்றும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், இப்படம் வணிக ரீதியாக அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
காதல் திருமணத்தால் சர்ச்சை
இயக்குநர் வேலு பிரபாகரன் முதலில் ஜெயாதேவி என்பவரை திருமணம் செய்தார். அதன் பின்னர் 2017ல் 60 வயதில் தன்னை விட 25 வயது குறைவான நடிகை ஷிர்லே தாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதல் கதை படத்தில் நடித்தபோது வேலு பிரபாகரனுக்கும் நடிகைக்கும் காதல் மலர்ந்தது. 60 வயதில் இரண்டாம் திருமணம் என சர்ச்சையானது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. ஆனால், அவர் காதலித்தோம் திருமணம் செய்தோம் என ஒரே வார்த்தையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். திருமணத்திற்கு பிறகு வேலு பிரபாகரன் ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கினார்.
வேலு பிரபாகரன் மரணம்
68 வயதான வேலு பிரபாகரனுக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை காெட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. மேலும் மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே போவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை 5.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி வேலு பிரபாகரன் காலமானார். மேலும், வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.





















