மேலும் அறிய

ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் 'கயிலன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

கயிலன் படம் முன்னோட்டம் வெளியீடு

ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கயிலன் ' திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள். 

விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில்  படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் B.T. அரசகுமார் பேசுகையில், ''இங்கு வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு முதலில் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  
அண்ணன் கே. ராஜன் இங்கு வந்தவுடன் 'கயிலன்' படத்தின் கதை என்ன? கிரைம் ஸ்டோரியா? ஃபேமிலி ஸ்டோரியா? எனக் கேட்டார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது என்ன என்று எனக்குத் தெரியாது. இயக்குநர் அஜித் மீதான நம்பிக்கையினால் நான் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஏதோ சம்பிரதாயத்திற்காக ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வாருங்கள் என்றனர். அதற்காக சில மணித்துளிகள் அங்கு சென்றேன். 

இந்த படத்தை பற்றி நான் சிந்திப்பதை விட அன்புத்தம்பி அருள் அஜித் சிறப்பாக சிந்தித்திருக்கிறார். மிக சிறந்த திரை காவியமாக கொண்டு வர வேண்டும் என அவர் கடினமாக உழைத்து இருக்கிறார். ‌ அதை நான் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்கிறேன். உங்களுடன் இணைந்து தான் நானும் இந்த படத்தின் முன்னோட்டத்தை இங்கு பார்த்தேன். 

இந்தப் படத்தின் நாயகி ஷிவதா தங்கமான சகோதரி. ஒவ்வொரு முறையும் பணிவாக நடக்கும் அவருடைய நடவடிக்கைகள் போன்று சினிமாவில் காண்பது அரிது. அவர் இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

நாடக குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவன் நான். எனது தாய் மாமன் வி கே சக்திவேல் மணப்பாறையில் மிகப்பெரிய நடிகர். கலைஞானத்தின் தம்பி போல் பணியாற்றியவர். 'பெரிய மருது ', 'மிருதங்க சக்கரவர்த்தி' போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 

எனது தாத்தாவும் நாடக நடிகர் தான். அந்த வகையில் என்னுடைய ரத்தத்திலும் கலை உணர்வு ஊறி இருக்கிறது. என்றாவது ஒருநாள் திரைத்துறையில் சாதிக்கலாம் என காத்திருந்தேன். 

1988-89 ஆண்டுகளில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகை தந்த என்னை இயக்குநர் டி. ராஜேந்தர் தான் திசை திருப்பினார். இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன்.  ஆனால் இந்த ஆசையை அப்போது கே.பாக்யராஜிடம் தெரிவித்திருந்தால் நடிகராகி இருப்பேன்.  89ம் ஆண்டிலிருந்து தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறேன். ஆனால் தற்போது தான் முதல் முறையாக 'கயிலன்' திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன். 

இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும்,  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். 

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ''இவ்விழாவிற்கு வருகை தருவதற்காக இயக்குநர் அருள் அஜித் எனக்கு விடுத்த அழைப்பு கவர்ந்ததால் இங்கு வருகை தந்தேன். அதுவும் இல்லாமல் கார்ப்பரேட் துறையில் 25 ஆண்டு காலம் பணியாற்றிய பிறகு, நான் தனியாக 2016ம் ஆண்டில் திரைப்பட வணிகத்தில்  ஈடுபட்ட போது வாங்கிய முதல் திரைப்படமான 'ஜீரோ' படத்தின் நாயகி ஷிவதா. அவர் இந்த படத்தில் நடித்திருப்பதால் வருகை தருவதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.  அவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். அவர் இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.  கம்பீரமான, ஸ்டைலிஷான போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கிறார். அவருக்காகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.  

இந்தப் படத்தின் தயாரிப்பாளரை வாழ்த்த வேண்டும். நாங்களெல்லாம் காலை  எட்டு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு தொடங்கி விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். இதற்காகவே படப்பிடிப்பு தளத்திற்கு செல்வோம். நானும் இயக்குநர் கௌரவ் நாராயணனும் இணைந்து 'சிகரம் தொடு' எனும் திரைப்படத்தில் பணியாற்றி இருக்கிறோம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நான் ஏழு முப்பது மணிக்கு எல்லாம் சென்று விடுவேன். எட்டு மணிக்கு படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பேன். இப்படி செய்தால் தான் குறைந்த நாட்களில் படத்தை திட்டமிட்டபடி நிறைவு செய்ய முடியும். மலையாளத்தில் இப்படித்தான் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்துவார்கள். 

ஒரு படம் பரவலான மக்களை சென்றடைந்தாலே வெற்றி பெறும். அந்த வகையில் இந்த' கயிலன்' திரைப்படமும் வெளியாகி, மக்களை சென்றடைந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார். 

நடிகர் பிரஜின் பேசுகையில், '' இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த ஆண்டின் எனது நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இது. மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். 

தற்போது சினிமாவில் நாம் நல்ல கன்டென்டுகளை கொடுத்தாலும் அதனை முறையாக விளம்பரப் படுத்துவதில் கோட்டை விடுகிறோம். சில படங்கள் மட்டும் தான் வேர்ட் ஆப் மௌத்தின் மூலம் வெற்றி பெறும். 'கயிலன்' நல்ல திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

இயக்குநர் அருள் அஜித் தொடர்ந்து படங்களை இயக்கினாலும் வளரும் நடிகர்களுக்கும் புதுமுக நடிகர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் சொன்னதைப் போல போராட வேண்டும். போராடினால் தான் வெற்றி கிடைக்கும் இது அனைவருக்கும் பொருந்தும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்,'' என்றார். 

பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தம் பேசுகையில், ''இந்தப் படத்தில் நிறைய புது முகங்கள் நடித்திருப்பதாகச் சொன்னார்கள் நானும் புது முகம் தான்.‌ 'விருமாண்டி' படத்தில் கமல்ஹாசன் திரைக்கதை எழுதும் போது அதில் மதுரை மண்ணின் பேச்சு வழக்கு இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு உதவினேன். திடீரென்று அவர் என்னைப் பார்த்து நடிக்கிறீர்களா? எனக் கேட்டார்  நான் பயந்துவிட்டேன். ஏனென்றால் அது மாடு பிடிக்கும் படம்.‌ இருந்தாலும் கமல் நான் மாட்டை பிடிக்கிறேன் நீங்கள் மைக்கை பிடியுங்கள் என்றார். இது எனக்கு பொருத்தமாக இருக்கவே ஒப்புக்கொண்டேன். தற்போது வரை ஐம்பது திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். 

இயக்குநர்கள் கதை செல்ல வரும்போது எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க முடியும் என்பதை சொல்லி விடுவேன். இந்த படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் என்னை அருமையாக கவனித்தார்கள். 

நான் முதலில் ஒரு சினிமா ரசிகன். அதனால் நான் பார்க்கும் எந்த படங்களையும் யாருடைய மனதும் காயப்படுத்தும் நோக்கத்தில் விமர்சிக்க மாட்டேன். சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் போது வருத்தம் அடைவேன். 

தற்போது மக்கள்தான் தேர்தலைப் போல் திரைப்படங்களையும் தீர்மானிக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்திலேயே முன் கதை சுருக்கம் இருக்கிறது. யார் அந்த கயிலன்? அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  அந்த காலத்தில் பாட்டு புத்தகத்துடன் அந்தப் படத்தின் முன் கதை சுருக்கம் இருக்கும் .அதை பார்த்துவிட்டு தான் படத்திற்கு செல்வார்கள். 

இந்தப் படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். உங்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம், நன்றி,'' என்றார். 

நடிகை ஷிவதா பேசுகையில், '''நெடுஞ்சாலை' படத்திலிருந்து 'கயிலன்' படம் வரை எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. வருடத்திற்கு ஒரு தமிழ் படத்தில் தான் பணியாற்றுகிறேன், இருந்தாலும் தொடர்ந்து நீங்கள் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த ஆதரவு இந்தப் படத்திற்கும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  இந்தப் படம் வெளியான பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்," என்றார். 

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், '''கயிலன்' என் பிள்ளை அரசகுமார் தயாரித்த படம். அது என் படம் தான். அரசகுமார் 1991ம் ஆண்டில் நான் நடத்தும் வண்ணாரப்பேட்டை காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது நான் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளி சங்கத்தின் தலைவர். என்னை சந்தித்து 'புதுக்கோட்டையில் இருந்து வருகை தந்திருக்கிறேன். சங்கத்தில் இணைய வேண்டும்' என கேட்டுக்கொண்டார். அப்போது அவரை பேச அனுமதித்தேன் அவரது பேச்சில் தீப்பொறி பறந்தது. அப்போதே இவர் மிகப்பெரிய ஆளாக வருவார் என கணித்தேன். 

தொடர்ந்து கடுமையாக உழைத்தார், துணிச்சல் மிக்கவர். வறுமையில் வாடினாலும் சிறிது பணம் சேர்ந்தவுடன் திராவிட விழிப்புணர்ச்சி கழகம் என்று ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். நர்சரி பள்ளியையும், அரசியல் கட்சியையும் ஒருசேர நடத்தினார். அதன் பிறகு அவரை சந்தித்து அரசியல் கட்சி வேண்டாம், ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைத்துக் கொள் என  அறிவுறுத்தினேன். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் அவரை சேர்த்து விட்டேன். மயிலாப்பூரில் ஒரு விழா எடுத்து தன் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தார்.‌ அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் மாநில துணைத்தலைவரானார். 

அதன் பிறகு புதுக்கோட்டையில் நடந்த ஒரு திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த விழாவில் தமிழகத்தை ஆளக்கூடிய முதல்வர் பதவிக்கு தகுதி பெற்ற மு.க. ஸ்டாலின் அவர்களே என பேசினார். உடனே அவரை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். ஆனால் மு.க. ஸ்டாலினிடமிருந்து அழைப்பு வந்தவுடன் திமுகவில் சேர்ந்து விட்டார். திமுகவின் செய்தி தொடர்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். இன்று ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய வலது கரமாகவும் செயல்பட்டு வருகிறார். பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். 

2001ம் ஆண்டில் நான் சின்ன திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது, 'என்னையும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக்குங்கள். நானும் படத்தை தயாரிக்கிறேன்' என்றார். நான் தான் கொஞ்சம் பொறுத்திரு என்றேன்.‌  

அதனைத் தொடர்ந்து நான் விநியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போதும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார். 

25 ஆண்டுகளுக்கு முன் படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்த அரசகுமார் இன்று தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். இன்று ஒரு திரைப்படத்தை இயக்குநரை நம்பி அளித்து தயாரிப்பாளராகி இருக்கிறார். 

தற்போது எழுபத்தைந்து சதவீத தமிழ் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். ஆனால் இவர் 'கயிலன்' என அருமையான தமிழில் பெயர் வைத்திருக்கிறார். கம்பராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களில் ஏராளமான தமிழ் பெயர்கள் இருக்கின்றன, அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைத்த இயக்குநரை பாராட்டுகிறேன். 

இப்படத்தின் முன்னோட்டம் ஆங்கில படத்தை போல் இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. இதன் ரீ-ரிக்கார்டிங் ஃபர்ஸ்ட் கிளாஸ், எடிட்டிங் ஃபர்ஸ்ட் கிளாஸ், கேமரா ஃபர்ஸ்ட் கிளாஸ். இப்படி எல்லா ஃபர்ஸ்ட் கிளாஸ்சும் இருப்பதால், மக்களும் இந்த படத்தை ஃபர்ஸ்ட் சாய்ஸாக பார்ப்பார்கள்.  

தமிழ் பண்பாடு குறையாத, தமிழ் கலாச்சாரம் மிக்க திரைப்படங்களை உருவாக்குங்கள் என இளம் இயக்குநர்களை கேட்டுக்கொள்கிறேன். 
இன்று திரைப்படங்களில் பெண்கள் மது அருந்தும் காட்சிகளை இயக்குநர்கள் இடம்பெறச் செய்கிறார்கள். இதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனெனில் பெண்கள் தான் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். 

300 கோடி ரூபாய், 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். சிறிய முதலீட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கான திரையரங்க கட்டணத்தை குறைக்க வேண்டும். இப்படி செய்தால் ஏழைகள் திரையரங்கத்திற்கு வருவார்கள். திரைப்படங்கள் வெற்றி பெறும். தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள். இதற்கு ஆவண செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுகிறேன்," என்றார். 

 

தலைப்பு செய்திகள்

Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
அனிருத் , சாய் அப்யரங்கரை காலி செய்ய வரும் மலையாள இசையமைப்பாளர்..சூர்யா 47 பிஜிஎம் மிரட்டுதே!
அனிருத் , சாய் அப்யரங்கரை காலி செய்ய வரும் மலையாள இசையமைப்பாளர்..சூர்யா 47 பிஜிஎம் மிரட்டுதே!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget