சமுத்திரகனி நடித்துள்ள கார்மேனி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள கார் மேனி செல்வம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது. ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார்.
ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நடிகர் கோதண்டம், கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன், ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன், இசையமைப்பாளர் ராமானுஜம், கலை இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் மணி அமுதவன், கரண் சக்கரவர்த்தி, தினேஷ், எடிட்டர் ஜெகன், படவா கோபி, நடிகர் சங்கரநாராயணன், நடிகை அபிநயா, தயாரிப்பாளர் அருண், நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, இயக்குநர் ராம் சக்ரி, சமுத்திரக்கனி, நடன இயக்குநர் ஹரிஷ், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வேதா லட்சுமி, ஒலி வடிவமைப்பு கலைஞர் ராகவ் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகர் சமுத்திரகனி உரை
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், "இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய நண்பர் ஸ்ரீராம் மூலமாக இப்படத்தின் திரைக்கதை எனக்கு வந்தது. கதையைப் படிக்கும் போதே அந்த இயக்குநரின் மனநிலை என்ன என்று தெரிந்துவிடும். அந்த மனசு தான் இயக்குநர் ராம் சக்ரியை என்னிடம் அழைத்து வந்தது. அவரை சந்தித்து இதைத்தானே சொல்ல வருகிறீர்கள் வாருங்கள் சேர்ந்து சொல்வோம் என்று இப்படத்தின் பணியை தொடங்கினோம். அவர் இப்போது என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார். இவரைப் போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது. இவரை எல்லாம் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருந்திட வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு. இப்படி இருப்பவர்களால் தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன். சக்ரி சார் நன்றி.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. கே பி சார் பட்டறையில் பணியாற்றி கொண்டிருக்கிறோம். எல்லோரும் வருவார்கள். எழுதுவார்கள். ஆனால் செந்தமிழனின் எழுத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். 'மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகள்' என்று ஒரு தொடர் சென்று கொண்டிருந்தது. கைலாசம் சார் செந்தமிழனை தொடர்ந்து எழுதச் சொல் என சொல்வார், அவ்வளவு தரமான ஒரு எழுத்தாளர் செந்தமிழன்.
மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ அவர்கள்தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள் தான் மிகவும் சந்தோஷமானவர்கள். இதை சொல்ல வருவது தான் இந்த 'கார்மேனி செல்வம்' படைப்பு.
இறைவனை நோக்கி காரைக்கால் அம்மையார் எழுதிய பாடல்களை அதே ஸ்ருதியில் இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு நாங்களும் சென்றோம். அதைப் பார்த்த இயக்குநர் 'தேவலோகத்தில் இருக்கிறோமோ..!' என்று தன் உணர்வை பகிர்ந்து கொண்டார். நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்தில் மிதந்தோம்.
பணக்காரன் வேறு. செல்வந்தர் வேறு. பணக்காரன் பிரச்சனைகளோடு இருப்பவன். செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர். உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவது தான் இந்தப் படம். இந்த படைப்பில் இது போன்ற நிறைய விஷயங்களை பேசி இருக்கிறோம்.
'கார் மேனி செல்வம்' சாதாரண திரைப்படம் மட்டுமல்ல. நாங்கள் இல்லாமல் போகலாம், ஆனால் இந்த படைப்பு இருக்கும். உங்களுடன் எப்போதும் இருக்கும்.
நிறைய சுமைகளை தூக்காதீர்கள். இ எம் ஐ என்ற பெயரில் சுமைகளை சுமக்காதீர்கள். அதன் பிறகு நடக்கக்கூட முடியாது. அந்த சுமையை சிறிது சிறிதாக இறக்கி வைத்து விட்டு, கை வீசி சந்தோஷமாக நடந்து பாருங்கள். மகிழ்ச்சியை உணர்வீர்," என்றார்.























