“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
சினிமாவில் அறிமுகமானபோது தனது உயரத்தால் நிராகரிக்கப்பட்ட ரகுவரன், பின்னர் அதையே தனது தனித்துவமான அடையாளமாக மாற்றியது எப்படி?

தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் தோற்றமே அவர்களுக்கான அடையாளமாக மாறிவிடும். அப்படிப்பட்ட நடிகர்களில் ரகுவரனும் ஒருவர். தனித்துவமான குரல், வித்தியாசமான உடல்மொழி, அமைதியாகவே அச்சத்தை ஏற்படுத்தும் நடிப்பு என தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது முத்திரையை பதித்தவர். குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியாக அவர் நடித்த விதம் இன்றளவும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இப்படி திரையில் தனி அடையாளத்தை உருவாக்கிய ரகுவரன், சினிமாவுக்குள் நுழைய முயன்ற ஆரம்ப காலத்தில் எதிர்கொண்ட அனுபவம் மிகவும் வித்தியாசமானது.
ரகுவரனின் உயரம்
திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்த பிறகு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை ரகுவரன் தேடத் தொடங்கினார். அப்போது அவரது நடிப்புத் திறமையைவிட தோற்றம் மற்றும் உயரம் குறித்துதான் சிலரின் கவனம் சென்றதாக அவர் பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆறு அடிக்கும் மேல் உயரம் கொண்ட ரகுவரனை வழக்கமான கதாநாயகன் தோற்றத்தில் பொருத்திப் பார்க்க முடியாது என்ற எண்ணம் அப்போது சிலரிடம் இருந்திருக்கிறது.
ஹீயோயினை எங்கே தேடுவது?
தனது உயரத்தைப் பார்த்து, “நீ இவ்வளவு உயரமாக இருக்கிறாய். உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” என்று சிலர் தன்னிடம் கேட்டதாக ரகுவரன் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, அவரது தோற்றத்தை வைத்து ‘ஜிப்ஸி’ என்றும் சிலர் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்த ஒருவருக்கு இதுபோன்ற விமர்சனங்கள் நிச்சயம் எளிதானதாக இருந்திருக்காது.
தோற்றமே அடையாளமாக மாறியது
ஆனால், காலம் செல்ல செல்ல ரகுவரனின் தோற்றமே அவருக்கான மிகப்பெரிய பலமாக மாறியது. வழக்கமான ஹீரோ கதாபாத்திரங்களைத் தாண்டி, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவர் காட்டிய நடிப்பு கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக பாட்ஷாவில் மார்க் ஆண்டனி கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. பின்னர் முதல்வன் உள்ளிட்ட படங்களிலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அந்தப் படத்திற்காக சிறந்த வில்லனுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றார். ஒரு காலத்தில் வாய்ப்புக்கு தடையாக பார்க்கப்பட்ட உயரமும் தோற்றமும், பின்னர் அவருடைய அடையாளமாகவே மாறியது. அதனால்தான் ரகுவரனின் ஆரம்பகால சினிமா பயணம், இன்று திரும்பிப் பார்க்கும்போதும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















