திரைக்கு அறிமுகமாகும் லியோ பட தயாரிப்பாளர் மகன் அக்ஷய்... சிறை படத்தைப் பாராட்டிய பிரபலங்கள்
விக்ரம் பிரபு நடிப்பில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள சிறை திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார். டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
சிறை பட பத்திரிகையாளர் சந்திப்பு
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர். சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார். இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசியதாவது
இந்த புராஜக்டில் இருப்பது எனக்கு பெருமை. பிலோமின் தான் இந்த கதையை என்னிடம் கொண்டு வந்தார். இயக்குநர் சுரேஷிடம் நான் இல்லாவிட்டாலும் இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் எனச் சொன்னேன். அவ்வளவு அருமையான கதை. இந்தப்படத்திற்கு உயிர் தந்தது நடிகர்கள் தான். விக்ரம் பிரபு, அனந்தா அக்ஷய் குமார் எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப்படத்தில் என்னுடன் உழைத்த என் இசைக் கலைஞர்களுக்கு என் நன்றிகள், முக்கியமாக யுவன் சங்கர் ராஜாவுடன் வேலை பார்த்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. அவருக்கு என் நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.
நடிகை ஆனந்தா பேசியதாவது
சிறை என் முதல் படம், எனக்கு மிகப்பெருமையாக உள்ளது. நான் விக்ரம் பிரபு சார் ஜோடியாக நடித்துள்ளேன். எனக்கு வாய்ப்பு தந்த லலித் குமார் சார், சுரேஷ் சார் எல்லோருக்கும் நன்றி. நான் திரைக்குடும்பம் இல்லை. நான் ஆசையில் தான் இந்தப்பட ஆடிஷன் சென்றேன். தமிழ் சார் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு என் நன்றி. ஒரு கனவு நனவானது போல இருக்கிறது அனைவருக்கும் நன்றி.
நடிகை அனிஷ்மா பேசியதாவது
இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் சின்ன வயதிலிருந்து நிறைய ஆசைப்பட்டுள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பு தந்த சுரேஷ் சாருக்கு, லலித் சாருக்கு நன்றி. விக்ரம் பிரபு சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். அக்ஷய் எனக்கு மிக ஆதரவாக இருந்தார். இப்போது நல்ல நண்பராகி விட்டார். இருவருக்கும் மதுரை சென்றது ஒரு ஸ்கூல் போன மாதிரி இருந்தது. சூரி சார் தான் எங்களை வழிநடத்தினார். இப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியதாவது
சிறை உண்மைக்கதை, உண்மையான மனிதர்களைப் பற்றிய படம். தமிழ் என்னிடம் சொல்லும்போது அப்படித்தான் சொன்னார். ஒரு படைப்பு அதற்குத் தேவையானதை அதுவே செய்து கொள்ளும் என்பார்கள் இப்படத்திலும் அது தான் நடந்தது. லலித் சார் வெற்றிமாறன் அஸிஸ்டெண்ட் என்றால் ஓகே என்றார், அவர் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். ஐஸ்டின் எத்தனை சண்டை போட்டாலும் அவர் மிகச்சிறப்பான இசையைத் தருவார். பிலோமின் மிகப்பெரிய உதவியாக இருந்தார். நடிகர்களை கையாள்வது எனக்குக் கஷ்டம் சூரி அதைப்பார்த்துக்கொண்டார். மாதேஷ் முதல் அனைத்து கலைஞர்களும் முழு உழைப்பைத் தந்துள்ளனர். ஒவ்வொரு டெக்னீஷியனும் அவரவர் வேலையை வெகு அர்ப்பணிப்புடன் செய்துள்ளார்கள். நடிகர்கள் எல்லோரது பெயரையும் சொல்வது கஷ்டம். எல்லோரும் குறிப்பிட்டு காலகட்டத்தில் முடிக்க பெரும் ஒத்துழைப்பு தந்தனர். விக்ரம் பிரபு சார் கிடைத்தது எனக்கு பெரும் அதிர்ஷ்டம். இக்கதாபாத்திரத்திற்காக உடலை ஏற்றி, மெச்சூர்டான ஏட்டாக அற்புதமாக நடித்தார். அக்ஷய் கதைக்குள் வந்து, இக்கதாப்பாத்திரத்திற்காக மிக கடினமாக உழைத்தார். உடலை குறைத்து, தாடி மீசை வளர்த்தி, அந்த கதாபாத்திரமாக மாறினார். ஒரு இன்னொசன்ஸ் முகம் தேவைப்பட்டது அனிஷ்மாவிடம் அது இருந்தது, நன்றாக நடித்துள்ளார். அனந்தாவும் அவர் பாத்திரத்தைச் சிறப்பாக செய்துள்ளார். நான் வீட்டிலிருந்ததை விட வெற்றிமாறன் சாருடன் இருந்தது தான் அதிகம். ரஞ்சித் அண்ணன் தான் என்னை வெற்றிமாறனிடம் அனுப்பினார். அவருக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. இந்த படத்திற்குள் ஒரு பொறுப்பு இருக்கிறது அதைச் சரியாகச் செய்துள்ளேன் என நம்புகிறேன். அந்த பார்வையை எனக்குத் தந்த வெற்றிமாறன் சாருக்கு நன்றி. ரொம்ப முக்கியமான படம், நெருக்கமான படம். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது
சிறை மிகவும் முக்கியமான படம். அக்ஷய்க்கு இது பிள்ளையார் சுழி அவருக்கு வாழ்த்துக்கள். நல்லவேளை விசாரணை மாதிரி படம் கிடைக்கவில்லை. நீ மாட்டு சாணி தானே அள்ளினாய், நான் யானை சாணி அள்ளினேன். எல்லாமே அனுபவம் தான். டாணாக்காரன் படம் வெயிலில் உழன்று நடித்த போது, ஜிப்ரானிடம் போன் செய்து எப்படியெல்லாம் மியூசிக் செய்யப் போகிறீர்கள் எனப் பேசினேன். ஆனால் அந்தப்படம் கோவிடால் திரையரங்குக்கு வரவில்லை. இப்போது அதே டாணாக்காரன் டீமுடன் மீண்டும் இப்படம் கிடைத்தது சந்தோசம். உங்களுக்கும் வாழ்த்துக்கள். இம்மாதிரி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தற்கு லலித் சாருக்கு நன்றி. என்னைத் தேர்ந்தெடுத்ததற்குத் தமிழ் சாருக்கு நன்றி. மாதேஷ் உங்கள் டீமுடன் வேலை பார்த்தது சந்தோசம். அனிஷ்மா, அனந்தா நீங்கள் கொஞ்ச நேரம் வந்தாலும் அட்டகாசமாக நடித்திருக்கிறீர்கள். நான் நடிக்கும் போது, சில காட்சிகளில் எப்படி இசை வரும் என நினைத்தேன். ஜஸ்டின் அற்புதமாகச் செய்துள்ளார். பிலோமின் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்து இப்படத்தைச் செய்துள்ளார். நன்றி. சூரிக்கு நன்றி. இன்று இங்கு வந்து படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் பெருமைப்படுகிற டீம் அவர்களுடன் இருப்பது சந்தோசம். எல்லோருக்கும் நன்றி.
இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது
மிக சந்தோசமான மேடை இது. எங்க காலேஜில் இருந்து, உதவி இயக்குநராக என்னுடன் வந்தவர்களில் ஒருத்தர் சுரேஷ். அவர் வெற்றிமாறனிடம் வேலை பார்ப்பது தெரியும். அவர் சிறை படம் செய்கிறார் என்றவுடன் ஆவலாக இருந்தேன். லலித் சார் பையன் நடித்தது எல்லாம் தெரியாது. படம் பார்த்தேன் அது தந்த எக்ஸ்பீரியன்ஸ் தான் முக்கியம். ஒரு கலைஞனாக ஆர்ட்டுக்கு எவ்வளவு நேர்மையாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். சுரேஷ் கலைக்கு நேர்மையாக மிக முக்கியமான படத்தைத் தந்துள்ளார். வெற்றி சாரிடம் வேலை பார்த்து அவரிடம் கற்றுக்கொண்டு படம் செய்தாலும், இந்தப்படம் எனக்கு ஆச்சரியம் தந்தது. அந்த மனிதர்களுடன் வாழ்க்கைக்குள் நெருங்கி கூட்டிப்போனது. ஒரு வாழ்க்கையாக அதன் இயல்பைப் பேசியதை முக்கியமாகப் பார்க்கிறேன். எனக்கே கதாநாயகி எப்படியாவது கதாநாயகனுடன் சேர்ந்துவிட வேண்டுமென பதட்டம் வந்துவிட்டது. அட்டகாசமான மேக்கிங் இருந்தது. எடிட்டிங் ரிதமுடன் இருந்தது. ஜஸ்டின் பின்னணி இசை அற்புதமாக இருந்தது. கலை இயக்குநர் எங்கள் காலேஜ் செட் தான். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். மாதேஷ் ஊரை காட்டிய விதம் அருமை, இந்தப்படத்தில் நெருங்கி பார்க்க முடிந்தது. மிகவும் பிடித்தது. அக்ஷய் நன்றாகச் செய்துள்ளார். விக்ரம் பிரபு இப்படத்தில் மிகவும் எதார்த்தமாகப் புதிதாக நடித்திருந்தார், அவருக்கு வாழ்த்துக்கள். அனிஷ்மா மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். தமிழுடைய திரைக்கதை மிக நன்றாக இருந்தது. காவலர்கள் இவ்வளவு நல்லவர்களா ? என ஆச்சரியமாக இருந்தது. உண்மைக்கதை எனும் போது ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும் சுரேஷ் மிக அழகாக இப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இப்படம் எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன், இப்படத்தை நம்பி எடுத்த லலித் சாருக்கு நன்றிகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது
இம்மேடை எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இந்த வருடத்தில் என் உதவியாளராகள் படம் தந்து வருகிறார்கள். சுரேஷ் மாதிரி இயல்பான மிக நிதானமான ஆளைப் பார்க்க முடியாது. நான் செய்வது தவறாக இருந்தாலும், அதை சொல்லும் விதத்தில் அவர் நேர்மை இருக்கும். மனிதர்களைக் கையாளும் திறமை அவரிடம் உண்டு. அவருக்கு லலித் சார் கார் பரிசு தருகிறார். முதல் படம் எடுக்கும் போது இருக்கும் அழுத்தம் எல்லாத்தையும் விட்டுவிட்டு , மிக இயல்பாக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்தப்படத்தில் போலீஸ் ஸ்டேஷன் சீன் உள்ளது அதைச் சரியாக எடுத்தால் படம் மிகப்பெரிய படமாக வரும் என்றேன். அதைத்தான் ரஞ்சித் பாராட்டினார். ஒரு விசயத்தை பிரச்சனையை அணுகுவதில், தீர்ப்பதில், அவருக்கு தனித்திறமை உள்ளது. ஆடுகளம் முடித்தவுடன் வந்து சேர்ந்தவர், என்னுடனே இருந்திருக்கிறார். சிறை படம் பார்த்துவிட்டேன். என்னுடன் இருந்தவர்கள் படம் செய்தால் என்ன தப்பு இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பேன். ஆனால் படம் பார்த்த எல்லோரும் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்கள். படம் எல்லோருக்கும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பெரிய மகிழ்ச்சி தருகிறது. தமிழுக்கு அவர் வாழ்க்கையில் போலீஸ் நடைமுறை சார்ந்து நிறைய அனுபவங்கள் இருப்பதால் அது மிகப்பெரிய தாக்கம் கொடுக்கிறது. படத்தில் எடிட் மிக நன்றாக இருந்தது. படத்திற்கு மிக முக்கிய பலமாக மியூசிக் இருந்தது. முதல் ஐந்து நிமிடம் தான் விக்ரம் பிரபு தெரிகிறார் அதன் பிறகு கதாப்பாத்திரம் தான் தெரிகிறது. எல்லா கதாபாத்திரங்களும் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளனர். எல்லாம் ஒன்றாக இணைந்து மிக அழகான படைப்பாக வந்து, நமக்குள் அழுத்தமான கேள்வியைக் கேட்கிறது. அனிஷ்மா சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கிறது. அக்ஷய் அந்த கதாபாத்திரத்திற்குள் காணாமல் போயிருக்கிறார். அவர் இயல்பாக நடித்துள்ளார். இத்தனை பேரின் உழைப்பும் படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது. சுரேஷ் எடிட்டரின் உதவி பெரிய பலமாக இருப்பதாகச் சொன்னார், பிலோமின் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். இவ்வளவு நாட்களுள் படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல, அதை சுரேஷ் சாதித்துள்ளார். இப்படம் பார்த்த அத்தனை பேருக்கும் மகிழ்ச்சியைத் தருவது சந்தோசம். இந்த வாய்ப்பை சுரேஷுக்கு தந்ததற்கு நன்றி. படம் வெளியாகும் முன் கார் தருவதும் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.





















