புகழ் போதையை நான் உணர விஜய் தான் காரணம்.. நடிகை பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்!
பிரியங்கா சோப்ரா தனது முதல் தமிழ் படமான தமிழனில் விஜய்யுடன் பணிபுரிந்தபோது புகழ் பற்றி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

விஜயுடன் நடிக்கும்போது தான் புகழ் என்பது பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் தெரிந்து கொண்டதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்தி சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளவர் பிரியங்கா சோப்ரா. 2000ம் ஆண்டு உலக அழகி போட்டியில் பட்டம் வென்று அசத்திய அவருக்கு தொடர்ச்சியாக சினிமாவிலும் நடிக்க அழைப்பு வந்தது. முதல் படமாக தமிழில் 2002ம் ஆண்டு விஜய் நடித்து வெளியான தமிழன் படத்தில் நடித்தார். ஆனால் அதன்பிறகு இதுவரை பிரியங்கா சோப்ரா எந்தவித தமிழ் படத்திலும் தோன்றவில்லை. மிக நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் முதல்முறையாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் வாரணாசி படத்தில் மந்தாகினி என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளார். இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘Not Skinny But Not Fat' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ராவிடம், நட்சத்திர அந்தஸ்து குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தனது முதல் தமிழ் படமான தமிழனில் விஜய்யுடன் பணிபுரிந்தபோது புகழ் பற்றி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
அதாவது, “ 2002 ஆம் ஆண்டு தமிழன் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நான் பார்த்த காட்சிகளால் தான் எனக்கு நட்சத்திர அந்தஸ்து பற்றிய புரிதல் ஏற்பட்டது. விஜய்யின் மகத்தான புகழ் அவர் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழன் படம் தான் எனக்கு முதன்முதலில் புகழைப் பெற்று தந்தது. அந்த படத்தில் நான் விஜயுடன் இணைந்து நடித்தேன். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
சுற்றிலும் நூற்றுக்கணக்கான மக்கள் விஜய் நடனமாடும்போதும், வேலை செய்யும்போதும் அவரைப் பார்க்க நின்றிருந்தார்கள். இது எனது முதல் படம். திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தியேட்டரில் நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த காட்சிகளைப் பார்க்கும்போது தான் எனக்கு நட்சத்திர அந்தஸ்து பற்றிய புரிதல் உண்டானது. இந்தியாவில் மக்கள் தங்கள் திரைப்படங்களை நேசிக்கிறார்கள். ரசிகர்கள் என்ன மாதிரியான அன்பை கொடுக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். அது ஒரு தெய்வீக உணர்வு என நம்பினேன்.
அந்த நேரத்தில் நான் நடிப்பும், புகழும் சமம் என நினைத்திருந்தேன். இளம் வயது என்பதால் சரியான புரிதல் இல்லை. நட்சத்திர அந்தஸ்துடன் இருப்பதால் தான் நாம் இந்த துறையில் இருக்கிறோம் என நினைத்து விட்டேன். ஆனால் ஒரு வேலையின் வெளிப்பாடாக தான் அந்த புகழ் நமக்கு கிடைக்கும் என்பது புரிந்தது என பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். முன்னதாக மற்றொரு நேர்காணலிலும் விஜயைப் பற்றி அவர் புகழ்ந்து பேசியிருந்தார்.
அதில், “ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு இருந்த பணிவைப் பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். எப்படி அவர் ஷூட்டிங் வந்தால் அங்கிருந்து முடியும் வரை நகர மாட்டாரோ, அதை நான் பின்பற்றி வருகிறேன்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















