Nanjil Sampath: திமுக ஆதிக்கத்தால் நான் நடித்த 5 படங்கள் ரிலீசாகவில்லை.. நாஞ்சில் சம்பத் வேதனை!
தவெகவின் வெற்றி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை முடித்து விட்டது. நாம் தமிழர் கட்சி அடுத்த தேர்தல் வரை இருக்காது. மதிமுக ஏற்கனவே முடிந்து விட்டது. தவெக மிகப்பெரிய அதிர்ச்சியை அதிமுகவுக்கு கொடுத்திருக்கிறது.

திமுகவின் குடும்ப ஆதிக்கம் தரையில் மட்டுமல்லாமல் திரையிலும் இருந்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அவரிடம் இந்த தேர்தலின் வெற்றியைப் பார்த்தப்பிறகு நாமும் போட்டியிட்டிருக்கலாமோ என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டதா என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், “எனக்கு எம்.எல்.ஏ.வாக நின்றிருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படவில்லை. கொள்கை பரப்பு செயலாளர் வெளிச்சம் போதுமானது. இதில் நிறைவடைகிறேன். திருச்செங்கோட்டில் கண்ணகி திருவிழா பட்டிமன்றத்தில் நடுவராக பங்கேற்றேன். அதில் இருக்கும் ஈடுபாடு எல்லாம் அரசியலில் இருக்காது. எம்.எல்.ஏ.,வாக ஆவதெல்லாம் ஒருநாள் செய்தி தான்” என கூறினார்.
நான் நடித்த 5 படம் ரிலீசாகவில்லை
தொடர்ந்து விஜய் பதவியேற்பு விழா பேச்சு பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, பதவியேற்ற அன்றைக்கு முதல்வர் பேசியது ரொம்ப அற்புதமாக இருந்தது. நான் மட்டும் தான் அதிகார மையம் என சொன்னார். கடந்தாண்டு பேரன்பும் பெருங்கோபமும் என்ற படத்தை நான் பார்த்தேன். தங்கர்பச்சான் தயாரித்து அவரது மகன் விஜித் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் சென்னையில் ஒரு மாலில் இரவு 10 மணி காட்சி தான் திரையிடப்பட்டது. அதனைப் பார்த்து நான் மறுநாள் போன் செய்து தங்கர்பச்சானை பாராட்டினேன். அவர் அழுது விட்டார். தியேட்டரே கொடுக்கவில்லை. அப்படியே கொடுத்தாலும் எந்த காட்சி திரையிடுகிறார்கள் என்பதை சொல்ல மாட்டேங்குகிறார்கள். பெரிய துயரத்தில் இருக்கிறேன் என தங்கர்பச்சான் தெரிவித்தார்.
அதேபோல் நான் நடித்த 5 படம் இன்னும் வரவில்லை. நான் அதில் சிறுவேடத்தில் நடித்துள்ளேன். அதற்கு தியேட்டர் கிடைக்கவில்லை என சொல்கிறார்கள். திமுக குடும்பத்தின் ஆதிக்கம் தரையில் மட்டுமல்ல திரையிலும் இருந்தது. இன்றைக்கு அதற்கு ஒரு முடிவு வந்துள்ளது. நான் மன்சூர் அலிகான் தயாரித்த சரக்கு என்ற படத்தில் நடித்தேன். அதில் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக நடித்தேன். அந்த படத்தை வெளியிட முடியவில்லை.
ஆனால் அந்த படம் பழனியில் 3 நாட்களாக ஓடிக்கொண்டிருப்பதாக ஒருவர் சொன்னார். அப்படியென்றால் ஆட்சி மாறியதும் தியேட்டர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. இனி போக போக தெரியும்” என நாஞ்சில் சம்பத் கூறினார்.
தவெகவால் பல கட்சிகளுக்கு முடிவுரை
அடுத்ததாக தவெகவின் வெற்றி பற்றி பேசிய நாஞ்சில் சம்பத், “தவெகவின் வெற்றி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை முடித்து விட்டது. நாம் தமிழர் கட்சி அடுத்த தேர்தல் வரை இருக்காது. மதிமுக ஏற்கனவே முடிந்து விட்டது. தவெக மிகப்பெரிய அதிர்ச்சியை அதிமுகவுக்கு கொடுத்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. விஜய் கோட் சூட் அணிந்து முதல்வராக வலம் வருவது இயல்பாக இருக்கிறது. அரசியலில் வெள்ளை கலர் தான் தமிழ்நாட்டில் பழக்கமாக இருக்கிறது. அது கை மூலம் தைக்கப்படும் கோட் என சொல்லப்படும் நிலையில் நிறைய பேர் எங்கு அதை தைக்கிறார்கள் என போன் செய்து கேட்டார்கள்.
நான் இதுவரை பயணம் செய்த கட்சிகளில் ஜெயலலிதாவிடம் அதிக மரியாதை கிடைத்தது. என்னை சரியாக அவர் புரிந்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து விஜயை சந்தித்தேன். நீங்களும் முதல்வராகலாம் என்ற புத்தகத்தை வழங்கினேன். இன்றைக்கு முதலமைச்சராகி விட்டார். இனி 25 ஆண்டுகள் தமிழ்நாட்டு அரசியல் உங்கள் கையில் தான் இருக்கிறது என கூறினேன். நான் தேர்தல் பரப்புரையை ரொம்ப கஷ்டப்பட்டு தான் செய்தேன். பொருளாதார ரீதியாக எனக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் தவெகவின் ஒரு கோடி இளைஞர்களிடம் நான் சென்று சேர்ந்து விட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















