அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவுக்கு ஒரு புடவை கூட வாங்கிக் கொடுக்காதது இன்றும் மனதில் இருக்கும் வருத்தம் என இளையராஜா பகிர்ந்த உருக்கமான நினைவு.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கைப் பயணத்தில் அவரது தாயார் சின்னத்தாய் அம்மாளுக்கு முக்கியமான இடம் உண்டு. வறுமையான சூழலில் இருந்து தனது மகன்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக அவர் செய்த தியாகங்களை இளையராஜா பல சந்தர்ப்பங்களில் நினைவுகூர்ந்துள்ளார். குறிப்பாக, சென்னை வந்து இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் புறப்பட்டபோது, குடும்பத்திடம் இருந்த முக்கியமான பொருளையே விற்று பணம் கொடுத்த சம்பவத்தை அவர் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
ரேடியோவை விற்றுக் கொடுத்த அம்மா

இளையராஜா மற்றும் அவரது சகோதரர்கள் இசைத்துறையில் முன்னேற வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வர முடிவு செய்தபோது, அவர்களிடம் போதுமான பணம் இல்லை. அந்த நேரத்தில் சின்னத்தாய் அம்மாள் வீட்டில் இருந்த ரேடியோவை விற்று கிடைத்த ரூ.400-ஐ மகன்களிடம் கொடுத்ததாக இளையராஜா தெரிவித்துள்ளார். அந்த பணத்தை கொடுத்தபோது, அது போதுமா என்றும் அவர் கேட்டதாகவும் இளையராஜா ஒரு முறை நினைவுகூர்ந்துள்ளார்.
ஒரு புடவை கூட வாங்கி கொடுக்கவில்லை
ஆனால் சென்னை வந்த பிறகு வாழ்க்கை அவர்களை வேறு பாதையில் அழைத்துச் சென்றது. பல்வேறு சிரமங்களை கடந்து இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகி, படிப்படியாக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். அவரது இசை மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன், அவரது குடும்ப வாழ்க்கையும் நிலையானதாக மாறியது. மனைவி, குழந்தைகள் என அனைவரும் வாழ்க்கையில் செட்டிலான பிறகும், தனது தாயாருக்காக சில விஷயங்களை செய்யாமல் விட்டுவிட்டதாக இளையராஜா கூறியிருக்கிறார்.
அதிலும் குறிப்பாக, தாயாருக்கு ஒரு புடவை கூட வாங்கிக் கொடுக்கவில்லை என்பதுதான் இளையராஜாவின் மனதில் இன்றும் இருக்கும் வருத்தமாக அவர் குறிப்பிட்டுள்ளார். வளையல், நகை என எதையும் வாங்கிக் கொடுக்கவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடைந்த பிறகும், தன்னை வளர்த்த தாயாருக்காக இதையெல்லாம் செய்யாமல் போய்விட்டோமே என்ற குற்ற உணர்வு அவரை உறுத்தியது.
மேலும், தனது தாயார் தன்னிடம் எதையும் கேட்டு வாங்கிக் கொண்டவர் அல்ல என்றும் இளையராஜா கூறியுள்ளார். அவர் எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுத்திருக்கலாம் என்ற நிலையில் இருந்தபோதும், தாயார் எதையும் கேட்டதில்லை என்பதும் அவரது நினைவுகளில் இடம்பெற்றுள்ளது. சின்னத்தாய் அம்மாள் 1989ஆம் ஆண்டு மறைந்த நிலையில், அவரைப் பற்றிய நினைவுகளை இளையராஜா இன்றும் பல்வேறு இடங்களில் உணர்வுபூர்வமாக பகிர்ந்து வருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















