Thalapathy Vijay: “விஜய் அடிச்சாரு, எட்டி உதைச்சாரு” - முன்னாள் உதவியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
நான் விஜய்க்கு உதவியாளராக பணியாற்றுவது அவருடன் இருந்தவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை அங்கிருந்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர் என செல்வம் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் யார் மீதோ இருந்த கோபத்தில் தன்னை அடித்து உதைத்ததாக அவரிடம் தனிப்பட்ட உதவியாளராக வேலைப் பார்த்த செல்வம் என்பவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஒரு நேர்காணலில் பேசிய செல்வம், “என்னுடைய ஊர் அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவில் உள்ள அங்கனூர் ஆகும். தேனாம்பேட்டையில் சினிமா பிரபலங்கள் தங்கியிருந்த விடுதியில் ரூம் பாயாக வேலை பார்த்தேன். அந்த பழக்கத்தில் சினிமாவில் சேர வேண்டும் என அங்கு வருபவர்களிடம் கேட்டேன். தொடர்ந்து உறுப்பினர் கார்டு வாங்கி சின்ன சின்ன வேலைகள் செய்துக் கொண்டிருந்தேன். முதலில் எனக்கு ரஜினியிடம் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் போகவில்லை. அதன்பிறகு சில படங்களில் தயாரிப்பு தரப்பில் வேலை பார்த்தேன்.
இப்படியாக எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படங்களில் 60 படங்களில் நான் வேலை பார்த்துள்ளேன். தொடர்ந்து என் வேலை பார்த்து விஜய் நடித்த பிரியமுடன், நிலாவே வா படத்தில் தயாரிப்பு தலைமையாக வேலை பார்த்தேன். அந்த நேரத்தில் சினிமாவில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற எதிர்பாராத சம்பவத்தால் எனக்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதன்பிறகு விஜய் நடிக்கும் படங்களில் பணியாற்றி வந்தேன். அவரை எனக்கு 15 வயதில் இருந்தே தெரியும். என் கல்யாணத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் தலைமையேற்று நடத்தி வைத்தார். இப்படியான நிலையில் வேலாயுதம் படத்தில் நான் விஜய்க்கு வேலை பார்த்தேன். அப்போது தான் தனிப்பட்ட உதவியாளராக நான் மாறினேன். அது விஜய் கூட இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை.
என் வாழ்க்கையை விஜய்க்கான அர்ப்பணிக்கும் அளவுக்கு வேலை பார்த்தேன். அதனால் என்னைப் பற்றி தவறாக சித்தரிக்கிறார்கள். இதற்கிடையில் துப்பாக்கி படத்தின் ஷூட்டிங் 6 மாதம் மும்பையில் நடைபெற்றது. என்னை விஜய்யின் மேக்கப் மேன், ஓட்டுநர் என அனைவரும் கடுமையாக டார்ச்சர் செய்தார்கள். அதனை ஒருநாள் நீலாங்கரை வீட்டில் சொல்வதற்காக சென்றேன்.
அங்கு போய் நடந்ததை எல்லாம் சொன்னேன். உடனே விஜய் சொன்னதைக் கேட்டு நான் மும்பையில் மீண்டும் துப்பாக்கி ஷூட்டிங்கிற்கு சென்றேன். அங்கு விஜய்யின் டச்சப் பாய் என்னை அடித்து விட்டார். தொடர்ந்து விஜய் அனைவரையும் அழைத்து விசாரித்தார். நான் எல்லாவற்றையும் போய் சொன்னவுடன் அவர்களுக்கு கோபம் வந்து விட்டது. இந்த பஞ்சாயத்து எஸ்.ஏ.சந்திரசேகர் காதுக்கு சென்றது. நேரில் போய் பார்த்தேன். அவரும் எல்லாரையும் அழைத்து கடுமையாக எச்சரித்தார். இது என் எதிர்தரப்பை மேலும் எரிச்சலூட்டியது. ஒருகட்டத்தில் விஜயே என் மீது வெறுப்பை காட்ட ஆரம்பித்தார்.
ஒருநாள் நான் அவருக்கு காலை உணவு கொடுக்கும்போது இட்லியில் முடி இருந்தது. அதைப் பார்த்து என்னை திட்டி விட்டார். இதனிடையே புலி படத்துக்காக நாங்கள் தலக்கோணம் சென்றோம். அப்போது எனக்கு உடம்பு சரியில்லை. விஜய் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்து மனதும் சரியில்லை.
இப்படியான நிலையில் தங்கியிருக்கும் இடத்தில் சாப்பாடு எடுத்து வைத்து விட்டு காத்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரிடமோ கோபத்தில் போன் பேசிக் கொண்டிருந்தார். பின் வந்து சாப்பிட்டு முடித்ததும் என்னை ஒரு அடி ஓங்கி அடித்தார். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அதன்பிறகு என்னை எட்டி உதைத்தார். மறுநாள் காலையில் கேரவனை சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கும்போது வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார்” என கூறியுள்ளார்.























