Sundarrajan: "1ம் வகுப்பு முதல் நண்பன்.." பாரதிராஜாவிடம் பாக்யராஜ் சென்றது எப்படி? மனம் திறந்த சுந்தர்ராஜன்
பாக்யராஜ் மற்றும் தனக்கும் இடையே இருந்த நட்பு, கோவையில் இருந்து சென்னை வந்தது எப்படி? என்பதை இயக்குனர், நடிகர் சுந்தர்ராஜன் விரிவாக பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் பாக்யராஜ். நடிகராகவும், கதாநாயகனாகவும் ஜொலித்த இவரின் ஆரம்பகால நண்பர் இயக்குனரும், நடிகருமான சுந்தர்ராஜன்.
பாக்யராஜ் என் நண்பன்:
இவர் கங்கை அமரனுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
"நான் பாப்பநாயக்கன்பாளையம். பாக்யராஜும் பாப்பநாயக்கன்பாளையம். ஒன்னாம் வகுப்புல நான் சேரும்போது அவனும் வந்து சேர்ந்தான். இரண்டு பேரும் சேர்ந்துதான் வேலைக்குப் போவோம். நானும், அவனும் 70 வருட கால நண்பர்கள்.
எனக்கு வாடா, போடானு கூப்பிடுவதற்கு இருக்கும் ஒரே நண்பன் பாக்யராஜ் மட்டுமே. தமிழ்நாட்டில் இந்தி ஒழிப்பு போராட்டத்தில் நான் இருந்தேன். இந்தி படம் நான் பண்ணதே இல்லை. வாய்ப்பு வந்தாலும் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். சினிமாவுக்கு வரும்போது பாக்யராஜ் கம்பெனியில் 70 பேர் வேலை செய்றாங்க.
கோயம்புத்தூருக்குத்தான் கஷ்டம்:
நம்ம கடையில 35 பேர் வேலை செய்றாங்க. நாங்க கஷ்டபட்றதால இங்க வரனும்னு அவசியம் இல்ல. நாங்க இருந்தா கோயம்புத்தூருக்குத்தான் கஷ்டம். வீட்லயும் சொல்றதும் கேட்கமாட்டோம். நான் நடிக்குறதுக்கு வரவில்லை. 25 வருஷமாகவே நான் இயக்குனராகவே இருந்தேன்.
நான் இப்பவும் செல்லில் டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன்தான் பேசுறேனு சொல்லுவேன். அதுதான் எனக்கு அடையாளம். நடிகர் சுந்தர்ராஜன், தயாரிப்பாளர் சுந்தர்ராஜன், அரசியல்வாதி சுந்தர்ராஜன்னு சொல்ல மாட்டேன். நான் டைரக்டராக ஆரம்பித்தேன். அதனால், அப்படி சொல்கிறேன்.
பாக்யராஜ் ஹீரோ ஆனது எப்படி?
எட்டு போட்டால் ட்ரைவர் ஆகலாம். எட்டுக் குட்டிக்கரணம் போட்டாலும் டைரக்டர் ஆக முடியாது. நானும் பாக்யராஜும் ஒன்றாகவே இருந்தோம். 1974ல் அவள் ஒரு தொடர்கதை ரிலீஸ். அதைப் பாத்துட்டு இனிமே நாம டைரக்டர் ஆகாம சென்னையை விட்டுப் போக கூடாதுனு இரண்டு பேரும் ஊரைவிட்டுப் புறப்பட்டோம்.
பாக்யராஜும், சின்னத்தாமன்னு ஒருத்தரும் பெங்களூர் போயிட்டு வந்தாங்க. நான் நேராக சென்னைக்கு வந்துட்டேன். ஆனால், பாக்யராஜும் நானும் சேர்ந்து இரட்டை இயக்குனர்களாக பண்ணப்போறோம்னு நான் நினைச்சுட்டு இருந்தேன். புதிய வார்ப்புகள்ல நீங்கதான் ( கங்கை அமரன்) ஹீரோ. நீங்க நடிக்க மாட்டேனு சொன்னதாலதான் பாக்யராஜை ஹீரோவா போட்டாங்க.
நான்தான் அனுப்புனேன்:
நாங்க யாருகிட்டயும் அசிஸ்டெண்டா போகவே இல்ல. இவன் டைரக்டராகிட்டா நாமளும் டைரக்டர் ஆகிடலாம். அப்படிதான் வாழ்ந்துட்டு இருந்தோம். அப்படிதான் நம்பிட்டு இருந்தோம். தூயவன் ரூமில் இருப்பார். அவர் அப்பப்போ வருவார். அழகுராஜானு ஒருத்தர் வருவாரு. பாரதிராஜானு ஒருத்தர் வந்துருக்காரு. ஒரே ஒரு அசிஸ்டன்ட் வேணும். அதுக்கு யார் போறீங்க?
தூயவன் நீ போனு எங்கிட்ட சொல்றாரு. நான் இல்ல இல்ல நம்ம நண்பரை அனுப்புங்க. அவன் கொஞ்சம் ஆங்கிலம் பேசுவான். அவன் டைரக்டர் ஆனா நாமளும் ஆன மாதிரிதான். அப்போ நீ முன்னால போடானு சொன்னேன். நான் ரொம்ப கூச்சப்படுவேன். இவன் தைரியமா பேசுவான்.
இவ்வாறு அவர் கூறினார்.























