மை லார்ட் படம் என்னை உலுக்கியது...இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டு
ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள மை லார்ட் திரைப்படத்தின் இசைவெளியீட்டில் படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். மை லார்ட் படம் தன்னை பெரியளவில் பாதித்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த நிகழ்ச்சியில் பேசினார்
மை லார்ட் படம் பற்றி மாரிசெல்வராஜ்
நேற்று நான் தொடர்ந்து இரண்டு படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று இந்த ‘மை லார்ட்’. இந்த படம் முடிந்த பிறகு, என்னோட அசிஸ்டன்ட்ஸோட சேர்ந்து அதிக நேரம் விவாதம் பண்ண வைத்த படம் இது. இந்த படம் ஒரு விஷயத்தை தெளிவாக கேட்கிறது – எளிய மனிதன் எல்லாத்தையும் இழந்த பிறகு, அவனிடம் மீதமிருக்கும் கடைசி ஆயுதம் என்ன? அந்த கேள்வியையே இந்த படம் ரொம்ப ஆழமாக முன்வைக்கிறது.
சசிகுமார் சார் கேரக்டர், ஒரு எறும்பு, ஒரு எலி, ஒரு பூனை வரை காப்பாற்றுற மனிதன், ஆனா “ஒரு மனிதனை விட்டுவிடலாமா?”ன்னு கேள்வி எழுப்பும் இடத்துல எனக்கு உண்மையிலேயே ஒரு ஷாக் இருந்தது. இது சரி–தவறு என்று தீர்ப்பளிக்குற படம் இல்லை. நம்ம மனசுக்குள்ள இருக்குற நியாயம், மனிதத்தன்மை, அறம்
இதையெல்லாம் நம்மையே யோசிக்க வைக்குற படம்.
ராஜுமுருகன் தொடர்ந்து இப்படிப்பட்ட சினிமாவை உறுதியோட செய்து வருவார். தான் எழுத்தாளனாக இருந்த போது சந்தித்த அத்தனை மனிதர்களையும் திரையில் கொண்டு வரத் துடிப்பவர் அதுக்காக தமிழ் சினிமா அவருக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்.
ஷான் ரோல்டன் இசை, நடிகர்களின் இயல்பான நடிப்பு, அம்பேத்கர் சார் மாதிரி தயாரிப்பாளர்கள் – இந்த எல்லாமே இந்த படத்தை ஒரு முக்கியமான படமாக மாற்றியிருக்கிறது. மை லார்ட் என்னை யோசிக்க வைத்த, உள்ளுக்குள் உலுக்கிய படம். படக்குழுவிற்கு பெரிய வாழ்த்துக்கள்
இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது
முருகன் தோற்றாலும் ஜெயித்தாலும் இவ்வளவு இயக்குநர்கள் உடன் இருக்கிறோம் ஆனால் அதைவிட பெரிய விஷயம் என்னவென்றால், ஒரு தயாரிப்பாளர் மறுபடியும் திரும்பி வந்து “முருகன் படம் பண்ணுறேன்”ன்னு நம்பிக்கையோட சொல்றது. எங்களோட அனுபவத்துல, ஒரு தயாரிப்பாளர்கிட்ட “இந்த படத்தை எப்படி புரமோட் பண்ணப் போறீங்க?”ன்னு கேட்டா, “முருகனோட படம் தான்”ன்னு ஒரே வரியிலே சொல்ல முடிஞ்சா, அதுவே மிகப் பெரிய புரமோஷன். உண்மையிலேயே நன்றி சார். முருகன் எந்த சமரசமும் செய்யாதவர், எந்த விஷயத்தையும் அவர் மிகவும் ஆழமா யோசிச்சுதான் செய்றார். “எனக்கு ரெண்டு சாய்ஸ் இருக்குன்னாலும், நான் எல்லாத்தையும் எடுக்க மாட்டேன். எனக்கு பிடிச்ச, சரியான படம் மட்டும் தான் எடுப்பேன்” அப்படின்னு சொல்லி அதை நடைமுறையிலே கடைப்பிடிக்கிறதுதான் அவரோட பெரிய பலம்.
சசிகுமார் சார்— தோற்றாலும், ஜெயித்தாலும் மக்கள் அவருடைய படங்களை தேடி பார்க்கிறாங்க. அந்த நம்பிக்கையே ஒரு நடிகருக்குக் கிடைக்கிற மிகப் பெரிய வெற்றி. அவர் செய்யும் கதாபாத்திரங்கள் எப்போதும் மிக தெளிவாக, எந்த குழப்பமும் இல்லாமல், நேர்மையாக இருக்கும். அந்த சிரிப்பு, அந்த உடல் மொழி, அந்த உள்ளார்ந்த மனிதத்தன்மை— அதை வீணாக்காமல் பயன்படுத்துறவர். உண்மையிலேயே மிகப் பெரிய வாழ்த்துகள் சார். இந்த படம் நிச்சயமாக பேசப்படும் படம். நாளைக்கு நான் ஆவலோட காத்திருக்கிறேன். மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம் இது. எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.























