காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது முன்னாள் காதலன் மீது பல்வேறு விமர்சனங்கள் வைத்த நிலையில் இது குறித்து நடிகர் துருவ் விக்ரம் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்

நடிகை அனுபமா பரமேஸ்வரனுடனான காதல் தோல்வி தொடர்பாக தன்மீது வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் குறித்து நடிகர் துருவ் விக்ரம் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்ந்து விமர்சனத்துக்கும், கண்காணிப்புக்கும் உள்ளாகும் நிலையில், இதுபோன்ற விஷயங்கள் தங்களை மனதளவில் பாதிக்குமா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்கள் தன்னை ஒருபோதும் பாதிக்கவில்லை என்று கூற முடியாது என்றும் துருவ் தெரிவித்துள்ளார்.
அனுபமா பரமேஸ்வரனும் துருவ் விக்ரமும் காதலித்து வந்ததாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகி வந்தன. இருவரும் இணைந்து சுற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியான நிலையில், அவர்களது காதல் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் தனது காதல் தோல்வி குறித்து பேசிய அனுபமா, தனது முன்னாள் காதலன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து துருவ் விக்ரம் மீது சமூக வலைதளங்களில் தொடர் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
விமர்சனங்கள் குறித்து துருவ் விக்ரம் விளக்கம்
இந்நிலையில், தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த துருவ் விக்ரம், நடிகராக சினிமாவுக்குள் வரும்போதே இதுபோன்ற விமர்சனங்களும் கவனமும் இந்தப் பணியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதை புரிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அது தன்னை ஒருபோதும் பாதிக்கவில்லை என்று கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சூழ்நிலைகளில் யதார்த்தத்துடன் தன்னை இணைத்துக்கொள்வதும், தான் யார், எதற்காக நிற்கிறோம் என்பதை அறிந்திருப்பதும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.
மேலும், வாழ்க்கையில் தனக்கு முக்கியமானவர்களையும், முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களையும் பாதுகாப்பது அவசியம் என்றும் துருவ் கூறியுள்ளார். உண்மையுடன் தன்னை இணைத்துக்கொண்டு, தன்னை நிலைநிறுத்தும் விஷயங்கள் என்ன என்பதை அறிந்திருந்தால் வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது திரையுலக பயணத்தில் கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக தன்னைச் சுற்றியுள்ள சிறிய குழுவினர் தொடர்ந்து ஆதரவாக இருந்ததாகவும், அவர்களின் ஆதரவும் ஊக்கமும் தனக்கு முக்கியமானதாக இருந்ததாகவும் துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















